மீன்வளத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து ரூ.51 லட்சம் சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினமாலா என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கோவையைச் சேர்ந்த ரகுமான் என்பவர் தனக்கும் மேலும் ஐந்து பேருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.51,00,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ரகுமான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விருகம்பாக்கத்தில் 'அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகை நிறுவனத்தை நடத்தி வந்த அவர், வங்கி மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.
போலீசார் ரகுமானைக் கோவையில் வைத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற வேலைவாய்ப்பு மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.
