திமுக ஆட்சி கடனில் ₹1,000 வழங்குகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
மருத்துவமனைக்குக் கையுடன் சென்றால் கை இல்லாமல் தான் வர முடியும்; 6,000 அம்மா கிளினிக்குகளை திறப்போம் என வாணியம்பாடியில் முழக்கம்!
மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்றத் திமுக அரசுக் கடன் வாங்கி வருவதாகவும், மருத்துவமனைக்குச் சென்றால் கையுடன் சென்றவர்கள் கை இல்லாமல் தான் திரும்பி வருவார்கள் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். வாணியம்பாடியில் நடந்த மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் அவர் இவ்வாறு பேசியது, "பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசின் நிதி மேலாண்மையைக் குறித்துப் பேசிய எடப்பாடி, அரசுப் பணத்திலிருந்து நிதி உயர்த்தி ஆயிரம் ரூபாய் அளிக்கவில்லை. கடன் வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே திமுக இந்தத் திட்டத்தை அறிவித்தது எனக் குற்றம்சாட்டினார். சட்டம் - ஒழுங்குகுறித்துப் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சாதி, மத சண்டைகள் கிடையாது; அமைதிப் பூங்காவாகத் தமிழகம் இருந்தது. ஆனால், இப்போது எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளையெனச் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" என்று சாடினார்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு என்று திமுக ஒரு மாய பிம்பத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், காவலர் ஜாகீர் உசேன் தனது உயிருக்கு ஆபத்து எனத் தெரிவித்தபோதும், அரசு அதைக் கண்டுகொள்ளாததால் அவர் வெட்டிக்கொல்லப்பட்டார். இதுவே அதிமுக ஆட்சியில் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்போம். யாரும் பயப்பட வேண்டாம், அதிமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மை மக்களைக் கண் இமை காப்பது போல் காப்போம்" என்று உறுதி அளித்தார்.
மேலும், மத்திய அரசோடு இணக்கமாக இருந்ததால்தான் பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வர முடிந்தது எனக் கூறிய அவர், திமுக ஆட்சியில் மூடப்பட்ட 2,000 அம்மா கிளினிக்குகளை மீண்டும் திறப்போம்; கூடுதலாக 4,000 புதிய கிளினிக்குகளை உருவாக்குவோம் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஏர் கலப்பை மற்றும் ₹11 லட்சம் மதிப்புள்ள ஜல்லிக்கட்டு காளையைப் பரிசாக வழங்கினர்.
