சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் நகர்புற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது திமுக சார்பாக பருவத ராஜா குல வம்சத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரை தலைவராக அறிவித்து தேர்தலை சந்தித்தனர். இதில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக சார்பாக 16 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பாக ஒருவரும் வெற்றி பெற்றனர். இதில் பருவதராஜகுல வம்சத்தை சேர்ந்த திமுகவைச் சார்ந்த ஐந்து கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக கூட்டணியில் மொத்தம் 17 கவுன்சிலர்கள் வெற்றிபெற்ற நிலையில் திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல் எடப்பாடி திமுக நகர செயலாளராக பதவி வகித்து வரும் பாஷா என்பவரை நகராட்சித் தலைவராக திமுக தலைமை அறிவித்ததால் அதிர்ச்சி அடைந்த பருவதராஜகுல வம்சத்தைச் சேர்ந்த மக்கள் ஐந்து கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதே இனத்தைச் சேர்ந்த கவுன்சிலரையும் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க அழைத்துச் செல்லக் கூடாது என கூறி அவர்கள் சென்ற வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் திமுக மாவட்ட பொறுப்பாளர் டிஎம் செல்வகணபதி மற்றும் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியும் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எடப்பாடியில் தலைவர் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.