சென்னை:
பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் (Tamil Nadu Local Body Elections 2022) தனித்துப் போட்டியிடப் போவதாக தமிழக பாஜக இன்று (ஜனவரி 31) அறிவித்தது. அதேநேரத்தில் தேசிய அளவில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடரும் என்றும் தமிழக பாஜக உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை (K Annamalai), தேசியத் தலைமையுடன் ஆலோசித்த பிறகே தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. கட்சி தொண்டர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த உறுதுணையாக இருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் தெரிவத்துள்ளார்.
ஆதாரங்களின்படி, பாஜக 20 சதவீத இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், அதிமுக 5 சதவீதத்துக்கு மேல் கொடுக்கத் தயாராக இல்லை என்பதால், இரண்டு கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட முக்கிய காரணமாக அமைந்தது.

பாஜக மாநிலத் தலைவரின் கூற்றுப்படி, பாஜக (BJP) அதிக இடங்களை கேட்டதாகவும், ஆனால் அதிமுக 5 சதவீத இடங்களை மட்டுமே கொடுக்க முன்வந்தாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடலூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 300 பேரூராட்சி வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டதை அடுத்து, இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதற்கான அறிகுறி தென்பட்டது.
அதிமுக (AIADMK) மேலிடத்துடன் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலையில், ஒரு நாள் கழித்து பாஜகவின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருந்தபோதிலும், அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கம் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒற்றுமையாகத் தேர்தலை சந்திக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தி உள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியின் மரணம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய சர்ச்சைக்குரியக் கருத்துகளைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவின் உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொதுத் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதியும் நடைபெறும்.
ஒரே கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்கள் பிப்ரவரி 5-ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாகும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் மற்றும் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.