
<p><span dir="auto">சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிக்ஸ் உச்சிமாநாடு மற்றும் பிரதமர் </span><span dir="auto">நரேந்திர மோடியுடனான</span><span dir="auto"> இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்திற்கு முன்னதாக, இரு நாடுகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் தீர்த்துக்கொண்டு, உறவை ஒரு மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று சீனா இன்று கூறியுள்ளது.</span></p>
<h2><span dir="auto">ஜின்பிங்கின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது - சீனா</span></h2>
<p><span dir="auto">சீன அதிபர் ஷி ஜின்பிங் சனிக்கிழமை புது தில்லிக்கு வருகை தருவார். அவரது இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை சீனா கோடிட்டுக் காட்டியுள்ளது. கசான் மற்றும் தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் சந்திப்பது இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.</span></p>
<div class="mid-taboola">
<h2 id="taboola-mid-article-personalisation-3187552" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget"><span dir="auto">“நாங்கள் இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவோம்“</span></h2>
</div>
<p><span dir="auto">மேலும், இரு நாட்டுத் தலைவர்களின் மூலோபாய வழிகாட்டுதலின்படி சீனா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று மாவோ கூறினார். இருதரப்பு உறவுகளை மூலோபாய மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் அது பார்க்கும். கருத்து வேறுபாடுகளை முறையாக தீர்ப்பதற்காக, உரையாடலையும், ஒத்துழைப்பையும் அது வலுப்படுத்தும். இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகவும், பரஸ்பரம் ஆதரவளிக்கும் பங்காளிகளாகவும் முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</span></p>
<p><span dir="auto">அதோடு, பிரிக்ஸ் உச்சிமாநாடு குறித்து பேசிய மாவோ, வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் நாடுகளிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் பேணுவதற்கான ஒரு முக்கியத் தளம் இது என்று கூறினார். பிரிக்ஸ் நாடுகள் அதன் தொடக்கத்திலிருந்தே வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு ஆகிய உணர்வுகளை பேணி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பிரிக்ஸ் அமைப்பு பன்முகத்தன்மை, நேர்மை மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கும், பொதுவான வளர்ச்சியை நோக்கி பணியாற்றுவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். </span></p>
<h2><span dir="auto">பிரிக்ஸ் அமைப்பு உலக தெற்கின் சக்தியை எடுத்துரைத்தது</span></h2>
<p><span dir="auto">தொடர்ந்து பேசிய அவர், பிரிக்ஸ், உலக தெற்கை வழிநடத்தும் ஒரு உண்மையான சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரிக்ஸ் அமைப்புக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதன் ஒத்துழைப்பில் தீவிரமாக பங்கேற்பதாகவும் அவர் கூறினார். உலக தெற்கு என்பது, பொதுவாக, வளரும், குறைந்த வளர்ச்சி பெற்ற அல்லது வளர்ச்சியடையாத நாடுகள் என குறிப்பிடப்படும் நாடுகளைக் குறிக்கிறது. </span></p>
<p><span dir="auto">இதில் முக்கியமாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகள் அடங்கும். ஈரான்-அமெரிக்க மோதல் மற்றும் உக்ரைன்-ரஷ்யப் போருக்கு மத்தியில் நடைபெறும் புது டெல்லி உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மாவோ, பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கவும் பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாகக் கூறினார். </span></p>
<p><span dir="auto">செல்வாக்கு மிக்க இந்தக் குழுவின் தற்போதைய தலைவராக, இந்தியா 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டை செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் நடத்தும். ஷி ஜின்பிங் கடைசியாக 2019-ல் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் மோடியுடன் ஒரு முறைசாரா உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.</span></p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/you-will-get-5-great-benefits-if-you-eat-corn-daily-274232" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article