
<p><strong>TN Perundurai ByElection:</strong> திமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அதில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை என விளக்கமளித்துள்ளது.</p>
<h2><strong>பெருந்துறை தேர்தல் வழக்கு - நிராகரித்த உயர்நீதிமன்றம்</strong></h2>
<p>பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியிலும் இணைந்தார். இதனிடையே,தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. </p>
<h2><strong>மனுவை நிராகரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?</strong></h2>
<p>மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். பெருந்துறை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இதனிடையே, தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து அண்மையில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<h2><strong>பெருந்துறைக்கு இடைத்தேர்தலா?</strong></h2>
<p>தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக இருந்தாலும், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை வேட்பு மனு தொடங்க, அக்டோபர் 6ம் தேதி பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் பெருந்துறை தேர்தல் வழக்கும் முடிவுக்கு வந்துள்ளதால், அந்த தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பாலாம் எனவும், அக்டோபர் 6ம் தேதியே இங்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேநேரம் திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.</p>
Source: Read Full Article