
<p><strong>TN By Election 2026:</strong> சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டிலும் தோல்வி கண்ட தவெக, இடைத்தேர்தல் வாயிலாக அவற்றை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p>
<h2><strong>தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்:</strong></h2>
<p>தமிழ்நாட்டில் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள 5 தொகுதிகளுக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த விரும்பவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன் நீட்சியாக காலியாக உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகள் இல்லாமல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், தொடர்ந்து அக்டோபர் 9ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/water-bottle-hygiene-how-often-should-you-wash-it-details-in-pics-273760" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>தவெக தோல்வி கண்ட தொகுதிகள்:</strong></h2>
<p>கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெற்று மே மாதம் 4ம் தேதி வெளியான சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான தவெக தோல்வியை கண்டு இருந்தது. தாராபுரத்தில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கௌரி சித்ரா அதிமுக வேட்பாளர் சத்யபாமாவை காட்டிலும் 34 ஆயிரத்து 662 வாக்குகளை குறைவாக பெற்று மூன்றவாது இடத்தை பிடித்தார். மறுபுறம் மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை காட்டிலும் தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 7 ஆயிரத்து 194 வாக்குகள் பின் தங்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால், அந்த இரண்டு தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் தான் இடைத்தேர்தலுக்கான சூழல் உருவாகியுள்ளது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/YQmUzU4Lq0w?si=2cR2bT4I3MpOAWBn" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>100 நாள் ஆட்சி கைகொடுக்குமா?</strong></h2>
<p>தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலுமே, ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை தவெகவால் பெற முடியவில்லை. இதனால் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மூலம் தனது பலத்தை பெருக்க தவெக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததை போன்று 7 தொகுதிகளுக்கானதாக இல்லாமல் 2 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போதைய சூழலில் ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதால் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற ஆளுங்கட்சி முனைப்பு காட்டுகிறது. அதோடு, தவெக அரசின் முதல் நான்கு மாத ஆட்சிக்கான சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான கணிசமான அறிவிப்புகள் உள்ளிட்டவை தங்களுக்கு கைகொடுக்கும் எனவும், மும்முனை போட்டி அமைந்தால் அதனால் பிரியும் வாக்குகளால் தங்களுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்றும் ஆளும் தரப்பு நம்புகிறது.</p>
<p><a title="TN Weather News: சென்னையில் சட்டென மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-september-8th-fresh-rain-alert-273867" target="_self">இதையும் படியுங்கள்: TN Weather News: சென்னையில் சட்டென மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை</a></p>
<h2><strong>CM விஜயின் பலம் கூடுமா?</strong></h2>
<p>200 யூனிட் வரை இலவச மின்சாரம், 717 மதுக்கடைகள் மூடல், தாய்மாமன் சீர், அண்ணன் சீர், காலை உணவு திட்டம் விரிவாக்கம், மகளிருக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், 3 விலையில்லா சிலிண்டர்கள் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான கடும் முயற்சிகள் எடுக்கப்படுவதோடு, டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பல்வேறு தரப்பினரும் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அரசிற்கு பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்று தந்துள்ளன.</p>
<p>அதேநேரம் ஆட்சி அமைந்ததும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மின்வெட்டு, மின்கட்டண குளறுபடி, சட்ட-ஒழுங்கு, காவிரி நீர் விவகாரம், லாக் - அப் மரணங்களின் மீது நடவடிக்கை எடுக்காதது, நிதி நெருக்கடி என கூறப்படும் நிலையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறை மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது & போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளும் அரசு மீது நிலவுகிறது. ஒட்டுமொத்தத்தில் தவெக அரசு பல சாதகங்களை கொண்டிருந்தாலும், கணிசமான சறுக்கல்களையும் சந்தித்துள்ளது. இவை தேர்தலில் எப்படி பிரதிபலிக்க உள்ளன என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதோடு <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> புதிய வேட்பாளர்களை களமிறக்குமா? அல்லது பதவிகளை ராஜினாமா செய்தவர்களையே மீண்டும் போட்டியிட அனுமதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p>
Source: Read Full Article