
<p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனின் அறிமுகக்கூட்டம் நடந்த நிலையில், அதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துக் கொண்டு முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>
<h2><strong>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்</strong></h2>
<p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியானது நிலவுகிறது. தவெக சார்பில் ஏற்கனவே இந்த தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். இரு தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்படுகிறது. </p>
<p><iframe title="ADMK candidates | தவெகவுக்கு அதிமுக செக்! வேட்பாளர்களை அறிவித்த EPS! பின்னணியில் பக்கா ப்ளான்" src="https://www.youtube.com/embed/SVmXC4yP1Ws" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>வேட்பாளர் அறிமுகக்கூட்டம்</strong></h2>
<p>இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பரந்தாமனை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார். பின் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “சட்டசபைக்கு பரந்தாமன் போல ஒரு ஆள் தேவை. இவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக சென்றால் அடுத்த 3 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும். </p>
<p>நான் யாரையும் இழிவுப்படுத்தியும், தவறாகவும் பேசவில்லை. தமிழ்நாட்டின் தலையெழுத்து என் முன்னால் இங்கு அமர்ந்திருக்கக்கூடிய கூட்டணி கட்சி தோழர்கள் மற்றும் திமுக தொண்டர்களின் கையில் தான் உள்ளது. அடுத்த 21 நாட்கள் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> இழிவுப்படுத்திப் பேசியதையும் மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். திமுகவின் வரலாறை, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் 21 நாட்கள் மனதில் வைத்து வைராக்கியமாக வேலை செய்தால் பரந்தாமன் வெற்றி பெறுவது உறுதி” என தெரிவித்தார். </p>
<h2><strong>3 மாதத்தில் ஆட்சி கவிழும்</strong></h2>
<p>மேலும் மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில் தான் தொடங்கியது. இன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் மிசாவைப் பற்றி தெரியாது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், என்னைப் போன்றவர்கள் தான் மிசாவின் கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள். எவனோ எழுதிக் கொடுத்ததைப் படித்து விட்டு சட்டசபையில் ஒரு தற்குறி பேசுகிறான். அவனுக்கு நான் ஒன்றை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.<a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> தன் வரலாறைப் பற்றி வீடியோ வெளியிட்டார். 45 லட்சம் பேர் அவரின் பேச்சைக் கேட்டுள்ளார்கள் என முதலமைச்சர் விஜயை ஆர்.எஸ்.பாரதி ஒருமையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/read-these-tips-and-follow-for-better-sleep-274116" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article