
<p><span dir="auto">மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது முற்றுகையையும் பிற நடவடிக்கைகளையும் கைவிட்டால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கடல்சார் கட்டமைப்பிற்குள் செயல்பட டெஹ்ரான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.</span></p>
<p><span dir="auto">இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், இந்த முக்கிய கடல்வழிப் பாதைக்காக ஓமானுடன் ஒரு குறிப்பிட்ட கடல்சார் கட்டமைப்பு குறித்து ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பெஷெஷ்கியன் கூறினார். இந்த கடல்வழிப் பாதையின் நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தாக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும், டெஹ்ரான் பதிலளித்து வருவதாக பெஷெஷ்கியன் கூறினார்.</span></p>
<div class="mid-taboola">
<h2 id="taboola-mid-article-personalisation-3188098" class="trc_related_container tbl-trecs-container trc_spotlight_widget"><strong><span dir="auto">“ஈரான் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டது“</span></strong></h2>
</div>
<p><span dir="auto">மேலும் அது குறித்து விரிவாக பேசிய அவர், "பாருங்கள், இதை ஹிஸ்புல்லாவோ அல்லது நாங்களோ தொடங்கினோம் என்று நான் நினைக்கவில்லை. இந்தக் குழுக்கள் அனைத்தும் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன." தன் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஈரான் நிர்பந்திக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்கா ஏன் இப்பகுதிக்குள் ஆயுதங்களைக் கொண்டு வந்து பிராந்திய வழித்தடங்களைத் தடுக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். அதோடு, "எந்த அடிப்படையில் அமெரிக்கர்கள் எங்கள் நிலப்பரப்பை தாக்கி, எங்கள் வழித்தடங்களைத் தடுக்கிறார்கள், நாங்கள் ஏதாவது செய்ய வேண்டாமா?" என்றும் கேட்டார்.</span></p>
<h2><span dir="auto">“உயிரோடு இருக்கும் வரை பதிலடி“</span></h2>
<p><span dir="auto">தொடர்ந்து, "நாம் உயிருடன் இருந்தால், நாம் பதிலடி கொடுக்க வேண்டும். நாம் இறந்த பிறகு பதிலடி கொடுக்க முடியாது. எனவே, நாம் உயிருடன் இருக்கிறோம், பதிலடி கொடுப்போம்," என்று பெஷெஷ்கியன் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க அழுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்புடையது என்று பெஷெஷ்கியன் தெளிவுபடுத்தினார். சாதாரண ஈரானியர்களின் நிலைமை மோசமடைவதற்குக் காரணம், தடைகள் என்று குறிப்பிட்ட ஈரான் அதிபர், "அமெரிக்கர்கள் இந்த முற்றுகையையும், தடைகளையும் நீக்கினால்... உங்களுக்குத் தெரியும், தடைகள் என்றால் நோயாளிகளைக் கொல்வது, மக்களை வேலையற்றவர்களாக்குவது, வறுமை, அதிருப்தி மற்றும் ஆயிரக்கணக்கான பிற பிரச்னைகளை உருவாக்குவது," என்று சுட்டிக்காட்டினார்.</span></p>
<p><span dir="auto">மேலும், ராணுவ நடவடிக்கை மூலம் தனது நோக்கங்களை அடையத் தவறிய வாஷிங்டன், இப்போது ஈரானியக் குடிமக்களுக்கு அழுத்தம் கொடுக்க, </span><span dir="auto">பொருளாதார நடவடிக்கைகளை கையாள்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார். போர் மூலம் தங்கள் நோக்கங்களை அடையாததால், இப்போது அவர்கள் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் அதை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், அது தோல்வியடையும் என்று பெஷெஷ்கியன் உறுதிபடக் கூறினார்.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/honey-consume-tips-if-you-take-honey-like-this-it-will-give-problem-274407" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article