
<p>பாகிஸ்தானில் நூற்றாண்டுகள் பழமையான இந்து கோயில் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதராஸா கட்டுவதற்காக கோயில் இடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவலை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. </p>
<p>சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள சிராஜ் கிராமத்தில் சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருந்தது. மதராஸா கட்டுவதற்காக இந்த நிலத்தை கைப்பற்றும் பொருட்டு கோயில் இடிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதனால் சிறுபான்மை அமைப்புகளும் உள்ளூர் மக்களும் கொந்தளித்தனர். அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். </p>
<p>லாகூர் மாகாணம் அரசு அதிகாரிகள் இந்த தகவலை மறுத்துள்ளனர். கனமழையின் காரணமாகப் பழைய கோயில் இடிந்து விழுந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கோயில் இடிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலை மீண்டும் கட்ட வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் மசிஹா மில்லத் கட்சியும் இணைந்துள்ளது. </p>
<p>கோயில் நிலம் அதன் அருகிலுள்ள ஒரு மதக் கல்வி நிறுவனத்தின் பயன்பாட்டிற்காகக் குறிவைக்கப்பட்டதாக மசிஹா மில்லத் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ம் தேதி அன்று பஞ்சாப் கூடுதல் உள்துறைச் செயலாளரைச் சந்தித்து கோயிலை இடிக்க காரணமானவர்கள், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வமான புகாரையும் போராட்டக்காரர்கள் அளித்துள்ளனர். மசிஹா மில்லத் கட்சி தலைவர் அஸ்லாம் பர்வேஸ் சஹோத்ரா கூறும்போது, கோயில் இடிப்பில் ஈடுபட்டவர்கள் தடைசெய்யப்பட்ட தீவிர வலதுசாரி இஸ்லாமியக் கட்சியான தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் அமைப்பில் உறுப்பினர்கள் என குற்றம் சாட்டினார்.</p>
<p>கோயில் இடிக்கப்பட்ட பிறகு, அதன் கோபுர உச்சியில் இருந்த கலசங்கள் உள்ளிட்ட பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. கோயிலை ஒட்டியிருந்த நிலம் ஒரு மதரஸாவிற்காக ETPB அறக்கட்டளையால் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படாமல் இருந்ததாலும் அந்த வளாகம் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாததாலும் குத்தகை ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டது. </p>
<p>இதன்பிறகே பல அந்த குத்தகை இடத்தின் சொத்தின் சில பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தது தெரிய வந்தது. ஆனால் அரசு தரப்பு இதனையெல்லாம் முற்றிலும் மறுத்துள்ளது. எங்கள் பதிவேடுகளில் இந்தக் கோயிலின் பெயர் இல்லை. இருப்பினும், இது மிகவும் பழமையான கோயில் என்பதால் நாங்கள் எதுவும் செய்யாமல் வைத்திருந்தோம். கோயிலுக்கு அருகிலுள்ள நிலம் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் கோயிலுக்குச் சொந்தமான நிலம் குத்தகைக்கு விடப்படவில்லை. மீண்டும் கோயில் கட்டுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என கூறியுள்ளனர். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/spiritual/which-is-the-best-direction-to-place-a-money-plant-at-home-272966" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article