
<p><strong>MadhuraMangalam Sipcot:</strong> காஞ்சிபுரம் அருகே மதுரமங்கலம் சிப்காட்டில் தான் 175 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்காவும் அமைய உள்ளதாம்.</p>
<h2><strong>பரந்தூர் அருகே தொழிற்பூங்கா:</strong></h2>
<p>காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நிலத்தை கையகப்படுத்தி, சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் திமுக ஆட்சி காலத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவுகளை செய்து வந்தனர். அதனையேற்ற, புதியதமாக அமைந்த முதலமைச்சர் விஜய் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால், ஏற்கனவே விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாகும்? அங்கு என்ன திட்டம் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் தான் பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் நிறுவப்பட உள்ள தொழிற்பூங்காவிற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது</p>
<h2><strong>20 ஏக்கரில் செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தி பூங்கா:</strong></h2>
<p>இந்த சிப்காட்டில் தான் செமிகண்டக்டர் துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ரூ.175 கோடி செலவில் புதிய உற்பத்தி பூங்காவும் அமைய உள்ளதாம். இதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில் தொழில் பயன்பாட்டுக்காக 8.3820 ஹெக்டேர் அதாவது சுமார் 20 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியானது செமிகண்டக்டர் உற்பத்தி துறைக்கு என பிரத்யேகமான பிரிவாக இருக்கும்.</p>
<h2><strong>5,000 பேருக்கு வேலைவாய்ப்பு:</strong></h2>
<p>இந்த திட்டம் தொடர்பாக அண்மையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, “புதிய சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுவசதிகளும் இடம்பெறும். இந்த திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தமிழகத்தின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் சூழலியலுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த திட்டம் தமிழகத்தின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் துறைக்கு பெரிய அளவில் ஊக்கமளிக்கும் என்பது என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் தற்போது மேற்கொண்டுள்ள லண்டன் பயணத்திலும், செமிகண்டக்டர் துறை சார்ந்த முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.<strong><br /></strong></p>
<h2><strong>மின்னணு ஏற்றுமதியில் இலக்கு</strong></h2>
<p>தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன்-2030 திட்டத்திற்காக ரூ.500 கோடியும், சென்னையில் சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்காக ரூ.100 கோடியில் 'Semiconductor Fabless Lab' அமைக்கும் பணிகளும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் ஏற்கனவே 33 சதவிகித பங்களிப்புடன் (9.56 பில்லியன் அமெரிக்க டாலர்) தமிழ்நாடு ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இந்த சூழலில் மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ், embedded systems மற்றும் சிப் டிசைனிங் படித்த தமிழக இளைஞர்களுக்கு அதிக அளவிலான உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாநிலத்தின் மின்னணு சார்ந்த ஏற்றுமதியும் பெரிய அளவில் அதிகரிக்கக் கூடும். உலகளவில் மின்னணு சாதனங்களுக்கான அதிகரித்து வரும் தேவையை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையாக மாற்ற அரசு முயல்கிறது. </p>
<h2><strong>மதுரமங்கலம் சிப்காட்:</strong></h2>
<p>இதனிடையே, புதிய விமான நிலைய திட்டம் பரிசீலிசனையில் இருந்தபோது பரந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகே உள்ள மதுரமங்கலத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அறிவிக்கப்படும் என கடந்த 2024ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இங்கு பல நூறு கோடி ரூபாய் செலவில் சாலை, மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூங்கா வாயிலாக, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. இதைசார்ந்து உணவகங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்துச் சேவைகள் போன்ற சிறு மற்றும் குறு தொழில்கள் இப்பகுதியில் பெருமளவில் பெருகும். மதுரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலங்களின் மதிப்பு கணிசமாக உயரும்.</p>
Source: Read Full Article