
<p>தவெக அரசின் தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். </p>
<h2><strong>தவெக அரசின் முத்தான திட்டம்</strong></h2>
<p>2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டமாகும். இதற்கு தாய்மாமன் தங்க மோதிர திட்டம் என பெயரிடப்பட்டது. </p>
<p><iframe title="Vijay London Trip | Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்" src="https://www.youtube.com/embed/oFnHEkpIUSI" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p> இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி 2026 ஜூன் 22 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த மற்றும் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் என்ற அறிவிப்போடு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. </p>
<p>இந்த தங்கம் மோதிரம் தொடர்பான டெண்டரும் வெளியிடப்பட்டது. இதில் தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தின் டெண்டர் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்து அதற்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டது. 11 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த டெண்டரில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவிகிதமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் 30 சதவிகித மோதிரங்களையும் சப்ளை செய்ய ஆணை வழங்கப்பட்டது. இதில் ஜாய் ஆலுக்காஸ் மிகக் குறைந்த தொகையாக ரூ 1 பைசாவுக்கு டெண்டரை கேட்டதால் முதலிடம் பிடித்து 70 சதவிகித ஒப்பந்தத்தைப் பெற்றது. ஓராண்டிற்கு சுமார் 4,41,667 பிரவசங்கள் நடக்கும் என கணக்கிடப்பட்டு மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. </p>
<h2><strong>தள்ளிப்போகும் திட்டம்</strong></h2>
<p>இந்த நிலையில் முதலமைச்சர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் அரசு முறை பயணமாக செல்வதால் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடங்கும் தேதி தள்ளிப்போவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த திட்டமானது வரும் செப்டம்பர் 25ம் தேதி தொடங்கும் எனவும், இதற்கான நிகழ்ச்சி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் காலை உணவு திட்டம் விரிவாக்கமும் தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. </p>
<p>இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் பிறந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் அன்று அவை வழங்கப்படும் எனவும், மோதிரங்களைப் பாதுகாக்க 107 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் கூடிய பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/taking-these-juice-to-reduce-skin-wrinkling-273809" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article