
<p>மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த விரிவான நேரடிக் கள ஆய்வு.</p>
<div dir="auto"><strong>மகா திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா </strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் 17.09.2026 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் கொ. வீர ராகவ ராவ், நகராட்சி நிர்வாக இயக்குநர் ப. மதுசூதன் ரெட்டி, மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் முனைவர் சி. பழனி, ஆகியோர் தலைமையில் இன்று (15.09.2026) விரிவான நேரடிக் கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மரு. டி.ஜி. வினய், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இக்குழுவினர் திருக்கோயிலின் சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், யாகசாலை வளாகம், 7 நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், மீனாட்சி அம்மன் கோயில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், பெரியார் பேருந்து நிலையம் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், எல்லீஸ் நகர் மற்றும் கிரைம் பிராஞ்ச் வாகன நிறுத்துமிடங்கள், தீயணைப்பு நிலையம், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மருந்துகளின் கையிருப்பைத் தட்டுப்பாடின்றி பராமரிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">பொதுப்பணித்துறை மற்றும் மின் ஆய்வுத் துறை அலுவலர்கள் திருக்கோயில் வளாகம், தற்காலிக மற்றும் நிரந்தரக் கட்டமைப்புகள், மேடைகள், பந்தல்களின் உறுதித்தன்மையை (Stability) முழுமையாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவதோடு, அனைத்து மின் இணைப்புகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்து சான்றளிக்க அறிவுறுத்தப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக அனுமதி பெற்றவர்கள் வரும் வழிகள் மற்றும் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் தரிசனம் செய்யச் செல்லும் பாதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 7 நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் மற்றும் சித்திரை வீதிகளில் கூடுதல் தடுப்புகள் (Barricades) அமைக்க உத்தரவிடப்பட்டது. யாகசாலை வளாகத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறுகிய தெருக்களில் எளிதில் சென்று செயல்படக்கூடிய சிறிய வகை தீயணைப்பு வாகனங்களை (Mini Fire Tenders) போதிய அளவில் தயார் நிலையில் வைத்திருக்கவும் உபகரணங்களைச் சீரமைக்கவும் ஆணையிடப்பட்டது. மேலும், அவசர மருத்துவத் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சுழற்சி முறைப் பணிகளை உறுதிசெய்து, கூடுதல் படுக்கைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால மருந்துகளின் கையிருப்பைத் தட்டுப்பாடின்றி பராமரிக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டது.</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகள், குடிநீர்க் குழாய்கள் மற்றும் நடமாடும் கழிப்பறைகளை ஏற்படுத்தவும், குறிப்பாக வடக்கு கோபுரம் பகுதியில் கூடுதல் குடிநீர் வழங்கும் கருவிகளை அமைத்து சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து கழிவுகளை உடனுக்குடன் அகற்றவும், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க நடைபாதைகளில் தேங்காய் நார் பாய்கள் விரித்து, சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்கவும், திருக்கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>போக்குவரத்து மேலாண்மை</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் முறையான போக்குவரத்து மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், காலணி பாதுகாப்பு மையங்களை ஒழுங்குபடுத்தி கூடுதல் வசதிகளைச் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் நுழைவு-வெளியேறும் வழிகள், குடிநீர், கழிப்பறை, காலணி பாதுகாப்பு மையங்கள் குறித்த வழிகாட்டிப் பலகைகளைத் தெளிவாக அமைக்கவும், இரவு நேரப் பாதுகாப்பிற்காகக் கோபுரங்கள் மற்றும் முக்கியப் பகுதிகளில் கூடுதல் மின்விளக்குகளைப் பொருத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் முறையான அனுமதியின்றி எவ்வித அன்னதானமும் வழங்க அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.</div>
<div dir="auto">விழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்யும் நோக்கில், அனைத்துத் துறை அலுவலர்களும் எவ்வித தொய்வுமின்றி முழு ஒருங்கிணைப்புடன் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் உத்தரவிட்டனர்.</div>
Source: Read Full Article