
<h2><strong>"ஓசியில் பீடி கேட்டு தொல்லை"</strong></h2>
<p>மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கட்டிட கூலித் தொழிலாளி அபிஜித் ( வயது 54 ) இவர், சென்னை நொளம்பூர் கஜலட்சுமி நகர் பகுதியில் தங்கி , அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் வேலை முடிந்து , அக்குடியிருப்பின் நுழைவு வாயிலில் நின்றபடி அபிஜித் செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து, வடமாநிலத் தொழிலாளி அபிஜித்திடம் ஓசியில் பீடி கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.</p>
<h2><strong>"அடித்து கொலை செய்யப்பட்ட வடமாநில நபர்"</strong></h2>
<p>அந்த கும்பலுக்கு அபிஜித் ஓசியில் பீடி தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரமான 4 பேரும் மது போதையில் வட மாநிலத் தொழிலாளி அபிஜித்தை உருட்டைக் கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரி தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். 4 பேர் கும்பலின் தாக்குதலில் படுகாயங்களுடன் அபிஜித் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்துள்ளார்.</p>
<p>அவரை சக நண்பர்கள் மீட்டு , அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிஜித்தை பரிசோதித்த டாக்டர்கள் , அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p>
<p>இது குறித்து தகவலறிந்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மர்ம நபர்களின் தாக்குதலில் இறந்து போன அபிஜித்தின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<p>இப்புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஓசியில் பீடி தராத ஆத்திரத்தில் வடமாநிலத் தொழிலாளியை மதுபோதையில் சரமாரி தாக்கி கொலை செய்த நொளம்பூர், கஜலட்சுமி நகரை சேர்ந்த கோகுல் ( வயது 18 ), வசீகரன் ( வயது 20 ), சபரி ( வயது 19 ), அஜய் ( வயது 18 ) ஆகிய 4 பேரையும் கைது செய்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p>
Source: Read Full Article