
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தமிழ் சங்கம் வளர்த்து தமிழை உலகறியச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையில், அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முழுமையாகத் தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள SETC பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகிக்க, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மீ.த. பாண்டியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/10/8bf674a5c846c2e7b0edff7fa814de441789026932843733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கம் வளர்த்த மதுரை மண்ணில், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அனைத்திலும் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர்த்து குடமுழுக்கு முழுவதையும் தமிழ் வழியிலேயே நடத்த வேண்டும்.</p>
<p style="text-align: justify;">நீதிமன்ற வழிகாட்டுதல்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி, கோபுரக் கலசம், கருவறை மற்றும் ஓம குண்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ் வழியிலேயே வழிபாடுகள் நடைபெற வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு மதுரை ஆதீனத்தை முதல் நபராக அழைத்து கௌரவிக்க வேண்டும்.</p>
<p style="text-align: justify;">தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சமஸ்கிருதத்தைத் தவிர்த்து, அர்ச்சனை மற்றும் வழிபாடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் வலுவான கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐஎம்எல் லிபரேசன் கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தங்ககுமரவேல், பொருளாளர் மொழியமுதன், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு மகேஷ், தமிழக மக்கள் முன்னணி வழக்கறிஞர் பாவெல், எழுத்தாளர் சாம்பான், புலவர் நாகேந்திரன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.லட்சுமணன், தலைவர் தாமஸ், ஆஓபாச பொருளாளர் ஆர்.ஆர்.நகர் சேகர் மற்றும் போக்குவரத்து சங்க கௌரவத் தலைவர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.</p>
<p style="text-align: justify;">மதுரை மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது. திருநாவுக்கரசரின் 2 பதிகங்களும், திருஞான சம்பந்தரின் 9 பதிகங்களும் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கிறது.</p>
<p style="text-align: justify;">அஷ்ட சத்தி மண்டபத்தின் மேல் மாடத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவுப்படுத்துவதாக உள்ளது. இந்த மண்டப வாயிலின் மையத்தில் நின்று அம்மன் சன்னதியை நோக்கினால் உள்ளே நடக்கும் கற்பூர ஆரத்தியை பார்க்கலாம்.</p>
<p style="text-align: justify;">பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் கிடைத்த ஸ்படிக லிங்கம் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்தியின்போது கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். கோவிலின் 2-ம் பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் நடராஜர் சிலை உள்ளது. ஊஞ்சல் மண்டபம் அருகே மேற்கூரையில் விநாயகர் உள்பட பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டுள்ளன. இத்தகைய பெருமையும் சிறப்புகளும் நிறைந்த இக்கோயிலில் வரும் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. </p>
Source: Read Full Article