
<p style="text-align: justify;"><strong>மயிலாடுதுறை:</strong> மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் கடற்பகுதியில், சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் புதைந்துள்ள பண்டைய புகார் நகரத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களைக் கண்டறியும் புதிய கடலடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதனை தமிழக அரசால் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வரலாற்று ஆய்வினை, பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாக கடலுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p>
<h3 style="text-align: justify;">ஆழ்கடலில் அமைச்சரின் நேரடி ஆய்வு</h3>
<p style="text-align: justify;">கடல் கொண்ட பூம்புகாரின் சங்க கால நிலப்பகுதிகளைத் கண்டறிய தமிழ்நாடு தொல்லியல் துறை விரிவான கடலாய்வுகளை நடத்தி வருகிறது. இந்த அகழாய்வுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு ஆழ்கடல் ஸ்கூபா டைவிங் (Scuba Diving) பயிற்சி பெற்று, நவீன கருவிகளுடன் படகில் சென்று கடலில் குதித்தார். </p>
<p style="text-align: justify;">தொல்லியல் துறை இயக்குனர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஐஏஎஸ், துறை சார்ந்த கடலாய்வுத் தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் நீர்மூழ்கி டைவிங் வீரர்களுடன் இணைந்து கடலுக்கு அடியில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடலடி ஆய்வின் போது தொல்லியல் வல்லுநர்கள் பேராசிரியர் முனைவர் ராஜன், முனைவர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் துறை இணை இயக்குனர் முனைவர் யதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்து அமைச்சருக்கு விளக்கங்களை அளித்தனர்.</p>
<h3 style="text-align: justify;">கடலடியில் கிடைத்த சங்க கால சான்றுகள்</h3>
<p style="text-align: justify;">ஆழ்கடலில் ஆய்வை முடித்துக் கொண்டு கரை திரும்பிய அமைச்சர் ராஜ்மோகன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், பூம்புகார் கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பல்வேறு வகையான தொன்மையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவற்றின் தனித்துவமான வடிவம் மற்றும் வண்ணங்களை ஆய்வு செய்ததில், இவை சங்க காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பானை ஓடுகளின் துல்லியமான வயதை அறிய அவை கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும், பானை ஓடுகள் மட்டுமின்றி பண்டைய கல் அமைப்புகள் மற்றும் உறை கிணறுகளுக்கான உறுதியான ஆதாரங்களும் கடலடியில் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் தமிழர்கள் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.</p>
<h3 style="text-align: justify;">உலகளவிலான வணிக மையம் மற்றும் தொடர் ஆய்வுகள்</h3>
<p style="text-align: justify;">பூம்புகார் கடலடியில் பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமான பானை ஓடுகள் கிடைத்துள்ளது, பண்டைய காலத்தில் பூம்புகார் துறைமுக நகரமானது உலக நாடுகளுடன் தொடர்பு கொண்ட மிகச்சிறந்த வணிக, கலை மற்றும் பண்பாட்டு மையமாக விளங்கியதை உறுதிப்படுத்துகிறது. பூம்புகார் பகுதியில் கடலடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என்றும், இந்த ஆய்வுகளின் முடிவில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழ்நாட்டின் சங்க காலத்திற்கும் இடையிலான நேரடித் தொடர்பை நிரூபிக்கும் உறுதியான சான்றுகள் விரைவில் வெளிவரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.</p>
<h3 style="text-align: justify;">தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை</h3>
<p style="text-align: justify;">தொடர்ந்து கல்வித்துறை சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், தமிழக அரசின் வழிகாட்டுதல்களைப் போலவே தனியார் பள்ளிகளும் தங்களது கல்விக் கட்டண விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரித்தார். தனியார் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய கட்டண நிர்ணயக் குழு சீரமைக்கப்பட உள்ளது. கட்டண அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>
<p style="text-align: justify;">குறிப்பாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைகள் சட்டத்தின் (RTE) கீழ் பயிலும் மாணவர்களிடம் கட்டண முரண்பாடுகளைக் காட்டக்கூடாது என்றும், அவர்களுக்குரிய அனைத்து சலுகைகளையும் முறையாக வழங்க வேண்டும் என்றார். மீறும் தனியார் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தார்.</p>
<h3 style="text-align: justify;">விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள்</h3>
<p style="text-align: justify;">சமீபத்திய கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். </p>
<p style="text-align: justify;">மேலும், தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது. ஆசிரியர்கள் தொடர்ந்த சட்டப் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறிச் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.</p>
Source: Read Full Article