
<p>விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அனுமந்தை குப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் எனக்கூறி கடந்த 3ம் தேதி அனுமந்தைகுப்பம், செட்டிநகர், கோமுட்டிசாவடி குப்பம் ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>அப்போது துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அமைச்சர்கள் ஒரு வாரத்திற்குள் நேரில் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலைந்து சென்றனர்.<br />இதனையடுத்து இன்று அனுமந்தைகுப்பம் மீனவ கிராமத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், வானூர் சார் ஆட்சியர் ஆகாஷ், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள் மீனவ மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.</p>
<p>அப்போது துறைமுகம் இல்லாமல் கடலில் சந்திக்கும் சவால்கள், படகுகள் பழுதடைவதால் உடல்நிலை பாதிக்கப்படுவது குறித்து மீனவர்களும், அவர்களது மனைவிகளும் எடுத்துக் கூறினர்.<br />அனைத்தையும் கேட்டறிந்த அமைச்சர் வன்னியரசு, மிக விரைவில் அனுமந்தைகுப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் மற்றும் நான் கூட்டாக வந்து அறிவிப்போம். இதுசம்பந்தமான அனைத்து கோப்புகளும் தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சென்றவுடன் முதல்-அமைச்சரை சந்தித்து அனுமதி பெற்று அமைப்போம் என வாக்குறுதி அளித்தார்.</p>
<p>தொடர்ந்து செய்தவர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:-</p>
<p>கடந்த 3-ம் தேதி அனுமந்தைகுப்பத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களின் ஒற்றை கோரிக்கை மினி துறைமுகம் வேண்டும் என்பது தான். சட்டசபையில் நான் இருந்தபோது துண்டு சீட்டில் இது எழுதப்பட்டிருந்தது. உடனே மீன்வளத்துறை அமைச்சரிடம் கொடுத்தேன். இது 2020-லேயே அறிவிக்கப்பட்டிருந்தது என்று அவர் கூறினார்.<br />இன்று பொதுமக்கள் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்ட கலெக்டர் தலைமை செயலகத்திற்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுப்போம்.</p>
<h2>அரசு தரப்பில் என்ன நடவடிக்கை?</h2>
<p>அமைச்சர் : அரசு தரப்பில் தான் வந்திருக்கிறோம். நாளிதழிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்காமல் நேரடியாக மக்களிடம் உட்கார்ந்து கேட்டிருக்கிறோம். முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.</p>
<h2>அதிமுக ஆட்சியில் அழகன்குப்பத்தில் துறைமுகம் அறிவித்தார்களே?</h2>
<p>அது கைவிடப்பட்டிருக்கிறது. அதில் நடவடிக்கை இல்லை.</p>
<h2>3 கிராமங்களுக்கு மட்டும் துறைமுகம் வைத்தால் மற்ற கிராமங்களுக்கு பாதிப்பு இருக்காதா?</h2>
<p>இது 3 கிராமம் மட்டுமல்ல, சுற்றியுள்ள 19 கிராமங்களுக்கும் பயன்படும் மினி துறைமுகம். சென்னையில் இருக்கிறது, அதற்கு பிறகு கடலூரில் இருக்கிறது, இடையில் இல்லை என்பதை தெளிவுபடுத்தினர்.</p>
<h2>பெரிய படகுகள் விபத்தாகும்போது மானியம் சரியாக கிடைக்கவில்லையே?</h2>
<p>மீன்பிடி தடைக்கால உதவித்தொகை கூடுதல்படுத்தப்பட்டுள்ளது. காயம்பட்டவர்கள், பழுதடைந்த படகுகளுக்கான உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.</p>
<h2>பிரதமர் வேட்பாளர் குறித்து?</h2>
<p>அவரவர் கட்சி தலைவரை அவரவர் பிரதமர் என்று சொல்கிறார்கள். த.வெ.க. தோழர்கள் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யை முதல்வராக, நாளை பிரதமராக பார்க்கிறோம் என்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் தங்கள் தலைவரை பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். அவரவர் தலைவரை பிரதமராக, முதல்வராக பார்ப்பது தவறில்லை. நாங்கள் கூட எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்கிறோம். இது உணர்வு, உரிமை, விருப்பம் சம்பந்தப்பட்டது.</p>
<h2>முதலமைச்சர் "ஓடிவிடக்கூடாது" என்று எதிர்க்கட்சியை பார்த்து சொன்னது குறித்து?</h2>
<p>கடந்த முறை முதலமைச்சர் உரையாற்றும்போது எதிர்க்கட்சியினர் வெளியேறி விட்டனர். அதனால் "திங்கள்கிழமை என் பேச்சு பயராக இருக்கும், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கும், அதனால் ஓடிடாதீங்க, இருந்து கேளுங்கள்" என்ற அர்த்தத்தில் தான் சொன்னார். நேர்மறையாக பார்க்க வேண்டும்.</p>
<h2>கே.என்.நேரு வீட்டில் ரெய்டு அரசியல் காரணமாகவா?</h2>
<p>10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை என்று சொன்னார்கள். அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள். அதுவரை உள்நோக்கம் கற்பிப்பது ஏற்புடையதல்ல. சட்டசபையிலேயே கே.என்.நேரு "குற்றச்சாட்டு இருந்தால் நடவடிக்கை எடுங்கள்" என்று தான் சொன்னார். அவரது வேண்டுகோளின் அடிப்படையில் கூட சோதனை நடக்கலாம்.</p>
<h2>சட்டமன்ற நேரலை ரீல்ஸில் வைரலாகிறதே?</h2>
<p>நேரலை என்பதால் தான் அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கிறது. தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கை வைக்கிறாரா என்பதை மக்கள் கவனிக்கிறார்கள். யாரையும் ஏமாற்ற முடியாது. சீரியல் பார்த்த பெண்களை விட சட்டமன்ற நேரலையை பார்த்த பெண்கள் தான் அதிகம் என்பது TRP-யிலேயே தெரிகிறது. Gen-Z வரை அரசியல் விழிப்புணர்வு வந்துள்ளது.</p>
<h2>காவலர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லையே?</h2>
<p>கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கையை வைத்துள்ளார். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இது நியாயமான கோரிக்கை. வி.ஐ.பி.க்கள் வரும்போது காவலர்கள், குறிப்பாக பெண் காவலர்கள் நீண்ட நேரம் சாலையில் நிற்பதை குறைக்க வேண்டும். முதலமைச்சர் செல்லும்போது கூட போக்குவரத்து முடக்கப்படுவதில்லை.</p>
Source: Read Full Article