
<p>மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் குளறுபடியும் அரசியலும் நடக்காது – மதுரையில் அமைச்சர் ரமேஷ் பேட்டி.</p>
<div dir="auto"><strong>உலகமே புகழக்கூடிய வகையில் குடமுழுக்கு விழா</strong></div>
<div dir="auto"> </div>
<div dir="auto">மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்து துறைகள் சார்பிலும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், உலகமே புகழக்கூடிய வகையில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்றும் கூறினார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியபோது</strong>,</div>
<div dir="auto">யாராக இருந்தாலும் அரசியல் பார்க்காமல் அனைவருக்கும் பாஸ் வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>பாஸ் வழங்குவதில் குளறுபடி நடப்பதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர்</strong>,</div>
<div dir="auto">மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் எந்த ஒரு குளறுபடியும், அரசியலும் நடக்காது என்றார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>கோயில் நிலங்களில் முறைகேடு தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிடப்படுமா என கேள்வி எழுப்பியபோது</strong>,</div>
<div dir="auto">கோயில் நிலங்கள் முறைகேடு தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பழனி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். ஏற்கனவே குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக பழனி கோயிலில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயம் கோயில் சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானை அரசு சார்பில் வாங்கப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, </strong></div>
<div dir="auto">கோயில் யானை உபயதாரர் மூலமாக பெறப்பட்டதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,</strong></div>
<div dir="auto">தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை என்றும், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் கூறினார். அவர்கள் தங்களது ஜனநாயக உரிமையை செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசியல் நிர்வாகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும், பொதுமக்கள் இந்த அரசை பாராட்டி வருவதாகவும் கூறிய அமைச்சர் ரமேஷ், நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>நடிகர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சேதுபதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தலைமைத்துவம் குறித்து விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ்</strong>,</div>
<div dir="auto">அரசியல் ரீதியான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறேன் என தெரிவித்தார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>முதலமைச்சரின் லண்டன் பயணம் தொடர்பாக வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்ற எல்.முருகனின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ்</strong>,</div>
<div dir="auto">முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் இருக்கும் என்றார். யார் யார் முதலமைச்சருடன் செல்வார்கள் என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்றும் கூறினார்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"><strong>விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதற்காகவும், உலகளவில் தமிழை கொண்டு செல்வது தொடர்பான சில நிகழ்வுகளிலும் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ்</strong>,</div>
<div dir="auto">இதையெல்லாம் வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு பதில் சொன்னால் மக்கள் பணி செய்ய முடியாது என தெரிவித்தார்.</div>
Source: Read Full Article