
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில், நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு "கொலு விற்பனை" கண்காட்சி தொடக்க விழா நடந்தது.<br /> <br />தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மாடியில் கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கூட்டுறவு சங்கத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கைவினை கலைஞர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/c84db9daffb85c6997e826bf1d4dc1501789653704849733_original.jpg" /></p>
<p style="text-align: justify;">இதில் காமாட்சி விளக்கு, பூஜை செட், விநாயகர் செட், அஷ்டலட்சுமி செட், சப்தமாதா செட், கருடசேவை செட், கர்ணன் செட், குற்றால அருவி செட், முப்பத்து முக்கோடி தேவர்கள் செட், நளவெண்பா செட், நரசிம்மர் செட், 18 சித்தர்கள் செட், நவதானிய செட், மாயா பஜார் செட், கொல்கத்தா பொம்மைகள் போன்ற ஏராளமான பொம்மைகள் மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரியை ஒட்டி கொலு விற்பனை மற்றும் கண்காட்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கொலு விற்பனை கண்காட்சியை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி. பிரபு ஜெயக்குமார் மோசஸ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். உதவி இயக்குனர் ஜி. விஜயகுமார், கணக்காளர் புஷ்பலதா, காசாளர் ஹேமலதா, உதவியாளர் செந்தில் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி நேற்று 17ம் தேதி முதல் வரும் அக். 20ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்தாண்டு ரூ.23 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.22 லட்சம் விற்பனை நடந்தது. அதேபோல் இந்தாண்டு ரூ.26 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு புது வரவாக பஞ்சபூத செட், பூரி ஜெகன்நாதர் செட், வரலட்சுமி விரதம் செட், நிச்சயதார்த்தம் செட், பழங்கால விளையாட்டுக்கள் செட், முத்தாரம்மன் பொம்மை, டாக்டர், நர்ஸ், போலீஸ், வக்கீல் பொம்மைகள், துலாபார செட், கிருஷ்ணன் விளையாட்டுகள் செட், துளசி கல்யாணம் செட் போன்றவை வந்துள்ளது. </p>
<p style="text-align: justify;">பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு கொலு கண்காட்சியினை நேரில் கண்டு, பொம்மைகளை வாங்கிப் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாக விளங்கக்கூடியது கொலு வைக்கும் வழிபாடாகும். இது வெறும் ஆன்மீகச் சடங்கு மட்டுமல்லாமல், படைப்புத் தொழில், மனித பரிணாம வளர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வை உணர்த்தும் மிகச் சிறந்த பாரம்பரியக் கலைப் வடிவமாக திகழ்கிறது.</p>
<p style="text-align: justify;">1. பரிணாம வளர்ச்சியை உணர்த்தும் படிகள்:</p>
<p style="text-align: justify;">கொலுவில் அமைக்கப்படும் ஒற்றைப்படை (3, 5, 7, 9) படிகள், ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை, அதைக் கடந்து இறை நிலையை அடையும் ஆத்மார்த்தமான பரிணாம வளர்ச்சியைத் தத்துவார்த்தமாக விளக்குகின்றன:</p>
<p style="text-align: justify;">1, 2, 3-ஆம் படிகள்: மரம், செடி, கொடி, நீர்வாழ் உயிரினங்கள், ஊர்வன மற்றும் பூச்சிகள் போன்ற ஓரறிவு முதல் மூவறிவு உயிரினங்கள்.</p>
<p style="text-align: justify;">4, 5, 6-ஆம் படிகள்: பறவைகள், விலங்குகள் மற்றும் ஆறறிவு படைத்த மனிதர்கள், மகான்கள், சித்தர்கள்.</p>
<p style="text-align: justify;">7, 8, 9-ஆம் படிகள்: நவதானிய முளைப்பாரி, மனிதனுக்கு மேலான தெய்வப் பிறவிகள், அஷ்டலட்சுமிகள், தசாவதாரம் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள்.</p>
<p style="text-align: justify;">மண், மரம் மற்றும் சுதை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களால் செய்யப்பட்ட பொம்மைகளையே கொலுவில் வைப்பது வழக்கம். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கொல்கத்தா பொம்மைகள் மற்றும் செட்டிநாடு மரப் பொம்மைகள் போன்றவை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு, உள்ளூர் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும் கலை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. </p>
Source: Read Full Article