
<p>பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதற்குப் பின் பேட்டியளித்த அன்பில் மகேஷ், காவல்துறையினர் தன்னிடம் 246 கேள்விகளை கேட்டதாகவும், அவை அனைத்திற்கும் பொறுமையாக பதில் அளித்ததாகவும் கூறினார். அவரது பேட்டியின் முழு விவரங்களை பார்க்கலாம்.</p>
<h2>8 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை</h2>
<p>பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ். காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம், காவல்துறையினர் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர். ஏற்கனவே, அன்பில் மகேஷின் திருச்சி வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜரான அவரிடம், 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கொடுத்து அதற்கு பதிலளிக்குமாறு காவல்துறை கேட்டுள்ளது.</p>
<h2>விசாரணைக்குப் பின் அன்பில் மகேஷ் கூறியது என்ன.?</h2>
<p>இந்நிலையில், காவல்துறையின் விசாரணை முடிந்து, இரவு பேட்டியளித்த அன்பில் மகேஷ், காவல்துறையினர் வைத்திருந்த 295 கேள்விகளில் 246 கேள்விகளை தன்னிடம் கேட்டதாக கூறினார். மேலும், அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தான் பொறுமையாக பதிலளித்ததாகவும், அதனை அவர்கள் பதிவு செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>அதோடு, கேள்விகள் மீதமிருப்பதால், அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு சம்மன் அனுப்புவதாக காவல்துறையினர் தெரிவித்ததாகவும், எப்போது அழைத்தாலும் தான் வந்து பதிலளிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்ததாகவும் அன்பில் மகேஷ் கூறினார்.</p>
<p>மேலும், தான் கூறிய பதில்களை பிரிண்ட் அவுட் எடுத்து தன்னிடம் கொடுத்ததாகவும், அவற்றை சரிபார்த்து, எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி, அதை அவர்கள் திருத்திய பிறகு தன்னிடம் கையெழுத்து பெற்றதாக அவர் தெரிவித்தார்.</p>
<h2>“இது ஒரு பொய் வழக்கு“</h2>
<p>தொடர்ந்து, அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து கேட்டப்பட்ட கேள்விக்கு, அந்த ஆவணங்களில், வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள் எதுவும் இல்லை என்றும், தான் பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்ததற்கு காரணம், இது ஒரு பொய் வழக்கு என்பதாலும், தனக்கு அந்த நம்பிக்கை இருந்ததாலேயே, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த அனைத்து பதில்களையும் கூறியதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.</p>
<p>இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசகுமார் மற்றும் முத்துக்குமார், அவரிடம் தான் பணத்தை கொடுத்ததாக தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது சார்ந்து அவர்களிடமே தான் கேட்கவேண்டும் என்று தான் கூறியுள்ளதாக தெரிவித்தார். வழக்கு விசாரணையில் இருப்பதால், இதற்கு மேல் தன்னால் எதுவும் கூற முடியாது என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/do-not-make-these-5-mistakes-while-charging-your-cellphone-274906" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<p> </p>
<p> </p>
<p> </p>
<p> </p>
Source: Read Full Article