
<p>தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2><strong>அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு:</strong></h2>
<p>இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆளுங்கட்சியான <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> மற்றும் எதிர்க்கட்சியான திமுக அறிவித்துள்ளது. இந்த சூழலில், தங்களிடம் இருந்து பறிகொடுத்த தொகுதியைக் கைப்பற்ற அதிமுக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது. அதிமுக வேட்பாளர்களாக தாராபுரத்தில் பானுமதியும், மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>
<h2><strong>யார் இந்த கணிதா?</strong></h2>
<p>மதுராந்தகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணிதா சம்பத் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆவார். இதுமட்டுமின்றி 2001 - 2006, 2011 - 2016 ஆகிய காலகட்டங்களில் ஜெயலலிதா காலத்திலே சட்டமன்ற உறுப்பினராக திருப்போரூர் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்று பொறுப்பு வகித்துள்ளார். கடந்த இரு சட்டமன்ற தேர்தலில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை மீண்டும் கணிதா சம்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கியுள்ளார்.</p>
<h2>யார் இந்த பானுமதி?</h2>
<p>தாராபுரம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பானுமதி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு 12வது வார்டு முன்னாள் உறுப்பினர் ஆவார்.</p>
<h2><strong>தவெக - அதிமுக - திமுக </strong></h2>
<p>தவெக சார்பில் இந்த தொகுதிகளில் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் ( மதுராந்தகம்), சத்தியபாமா ( தாராபுரம்) ஆகியோரே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் வேட்பாளர்களாக மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். </p>
<p>ஆளுங்கட்சியாக விஜய் தலைமையிலான தவெக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக திமுக - அதிமுக - தவெக இடையே மோதல் உருவாகியிருப்பதால் இந்த இடைத்தேர்தல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.</p>
<p><a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யின் தவெக-வை இந்த இடைத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான திமுக-வும், தங்களது தொகுதியை மீண்டும் தாங்களே வசப்படுத்த வேண்டும் என்று அதிமுக-வும் களமிறங்கியுள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிய நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 16ம் தேதி ஆகும். வேட்புமனுவைத் திரும்ப பெற செப்டம்பர் 19 கடைசி நாள் ஆகும். இடைத்தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.</p>
<p> </p>
Source: Read Full Article