
<h2>2 தொகுதி இடைத்தேர்தல் - தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்</h2>
<p>தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது தவெக. இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்த நிலையில், அந்த கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அதே நேரம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த நிலையில், தேர்தல் வழக்கு காரணமாக 5 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p>
<h2>2 தொகுதி வேட்பாளரை அறிவித்த ஸ்டாலின்</h2>
<p>அந்த வகையில் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கியுள்ளது திமுக, மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமனும், தாராபுரம் தொகுதிக்கு சுகன்யாவும் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து இந்த தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே இரண்டு பேரின் வெற்றிக்கு தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 100 நாட்களில் தவெக அரசின் செயல்பாடு மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல் சட்டமன்றத்தில் முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மட்டுமில்லாமல் அமைச்சர்களின் பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<h2>திமுகவினருக்கு பறந்த உத்தரவு</h2>
<p>எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்று <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சர் சி.டி.நிர்மல் குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து வந்த முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனுக்கு திமுகவினர் மட்டுமல்லமால் பல தரப்பிலும் கடந்த சில நாட்களாக ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், அவரை களத்தில் இறக்கியுள்ளது திமுக, இதே போல வழக்கறிஞரான சுகன்யாவையும் தாராபுரம் வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றும் வகையில் அந்த தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், </p>
<h3>பொறுப்பாளர்களை நியமித்த <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a></h3>
<p>நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட கீழ்கண்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.</p>
<p><strong>மதுராந்தகம் (தனி) தொகுதி</strong></p>
<p>1. தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)<br />2. க.சுந்தர் (காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)</p>
<p><strong>தாராபுரம் (தனி) தொகுதி</strong></p>
<p>1. மு.பெ.சாமிநாதன் (கழகத் துணைப் பொதுச்செயலாளர்)<br />2. இல.பத்மநாபன் (திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)<br />அருகில் உள்ள கழக மாவட்டத்தினர் பொறுப்பாளர்களுடன் இணைந்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/check-sim-cards-registered-in-your-name-274188" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article