
<h2><strong>"கிணற்றில் மிதந்த சிறுவர்கள் சடலம்"</strong></h2>
<p>வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் , பெத்தூர் பகுதியில் , முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது கிணற்றை எட்டிப் பார்த்த போது , அதற்குள் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.</p>
<p>இதையடுத்து மின்மோட்டாரை நிறுத்திய அவர் , ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்காயம் காவல் துறையினரும் , தீயணைப்புத் துறையினரும் கிணற்றுக்குள் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் , உயிரிழந்த சிறுவர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.</p>
<h2><strong>"திருமணம் மீறிய உறவு"</strong></h2>
<p>வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த 6 நாட்களாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஜமுனாமத்தூர், வெளிச்சானூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு - சிவகாமி தம்பதியின் மகன்களான 5 வயது பிரதாப் மற்றும் 2 வயது பிரேம்குமார் என்பது தெரிய வந்தது.</p>
<p>இதையடுத்து குழந்தைகளின் தாய் சிவகாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ராஜா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , இருவருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.</p>
<p>போலீஸ் விசாரணையின்படி, சிவகாமிக்கும் அவரது கணவர் சேட்டுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் , இதனால் இருவரும் கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சேட்டு செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த சிவகாமிக்கு , அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவுடன் பழக்க ஏற்பட்டுள்ளது.</p>
<p>இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், சிவகாமி மீண்டும் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் , அவர்களைப் பற்றி ராஜா கேள்வி எழுப்பியதாகவும், இதையடுத்து இருவரும் குழந்தைகளை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<h2><strong>"சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்"</strong></h2>
<p>சம்பவத்தன்று சிவகாமி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆலங்காயம் பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்குள்ள ஆள் நடமாட்டம் குறைந்த விவசாயக் கிணற்றுக்கு குழந்தைகளை அழைத்து சென்று இருவரையும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாகவும் , பின்னர் ராஜாவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>
<p>இதையடுத்து சிவகாமி மற்றும் ராஜா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.</p>
Source: Read Full Article