
<p style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதையொட்டி மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தொகுதி முழுவதும் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<h3 style="text-align: justify;">செப்டம்பர் 16 வரை வேட்புமனு தாக்கல்</h3>
<p style="text-align: justify;">மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல், வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p style="text-align: justify;">தேர்தல் அட்டவணையின்படி, அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.</p>
<h3 style="text-align: justify;">2.13 லட்சம் வாக்காளர்கள்</h3>
<p style="text-align: justify;">மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 1,04,886 ஆண் வாக்காளர்களும், 1,08,738 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலக அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 குழுக்கள்</h3>
<p style="text-align: justify;">தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் இடம்பெற்றிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களையும் 72 மணி நேரத்திற்குள் அகற்ற அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<h3 style="text-align: justify;">SUVIDHA மூலம் முன்அனுமதி கட்டாயம்</h3>
<p style="text-align: justify;">தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், பிரசார வாகனங்களைப் பயன்படுத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் SUVIDHA செயலி மூலம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களும் புகார் அளிக்கலாம். இதற்காக C-Vigil செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1950, 1800-425-7088 மற்றும் 044-27427412 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணிகள் வேகம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Source: Read Full Article