
<p>ஹாங்காங் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு ஏற்கனவே இருந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மதிப்பு அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>உலகளவில் பிறப்பு விகிதம் என்பது குறைந்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வெளிப்படையாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். இளம் தலைமுறையினர் குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைச் சரிசெய்யவும், மக்களை பொருளாதார கவலையில் இருந்து வெளிக்கொண்டு வரவும் பல நாடுகள், மாநிலங்கள் சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹாங்காங் நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றால் இந்திய மதிப்பில் ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. </p>
<p>இந்த திட்டமானது வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில் ஹாங்காங் நாட்டில் அடுத்த 5 ஆண்டுகள் திட்டம் குறித்து தலைமை நிர்வாகி ஜான் லீ கா-சியு உரையாற்றினார். அப்போது இந்த பச்சிளம் குழந்தைக்கான ஊக்கத்தொகைத் திட்டம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என அவர் அறிவித்தார். </p>
<p><iframe title="TVK Sathyabama vs Admk | துரோகி ஒழிக!"அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.. ஷாக்கான <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> சத்தியபாமா" src="https://www.youtube.com/embed/a1wVWb5pYwg" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?</strong></h2>
<p>இரண்டாவது மற்றும் அதற்கு மேலும் குழந்தைகள் பெறுபவர்கள் ஊக்கத்தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கப்படும். இந்த குழந்தைகளுக்கு வரிவிலக்கானது ரூ.17.15 லட்சத்தில் இருந்து ரூ.19.60 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>குழந்தை பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு வரை சொத்துக்களை வாங்கும் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் என்ற உச்சவரம்புடன் முத்திரைக் கட்டணம் ரத்து செய்யப்படும்.</p>
<p>அதுமட்டுமல்லாமல் வீட்டு உரிமைத் திட்டத்தின் (HOS) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட வெள்ளை படிவக் குடும்ப விண்ணப்பதாரர்களின் முன்பணச் சுமையைக் குறைக்கும் வகையில் அடமானக் கடன்-மதிப்பு விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 11 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. </p>
<p>ஆனால் ஹாங்காங் நாட்டு பண மதிப்பின்படி இந்த பணம் பெரிய அளவில் உதவாது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அங்கு கணவன் மட்டுமல்லாமல் மனைவியும் ஏதாவது ஒரு வேலை செய்யும் அளவுக்கு பொருளாதார நிலை உள்ளதாக கூறப்படுகிறது. ஹாங்காங் நாட்டைப் பொறுத்தவரை அங்கு கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்களின் சொந்த வீடு வாங்கும் விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊக்கத்தொகை 2023ல் அறிமுகப்படுத்தியது என்றாலும் 2024ல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 35,723 ஆக உயர்ந்தது. ஆனால் 2025ம் ஆண்டில் 31,000 ஆகவும், 2026ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 19,255 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 8 மாதங்களை ஒப்பிடும்போது 10 சதவிகிதம் குறைவாகும். இதனால் அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-dont-do-this-suffering-from-migraines-274493" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article