
<p style="text-align: justify;">முதல் தேர்தலிலே தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கும் தவெக தலைவர் விஜயை, இந்தியாவின் பிரதமராக ஆக்கும் முயற்சிகள் இப்போதே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அமைச்சர்கள் இது பற்றி பேசிவரும் வேளையில், வட மாநிலங்களில் விஜயை கொண்டுச்சேர்க்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது விஜயின் டீம். விஜயின் புகைப்படம் மற்றும் மோடியின் புகைப்படத்தை காண்பித்து, வட மாநிலங்களில் எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோக்களும் இதன் பின்னணியில்தான் நடைபெற்று வருகிறது.</p>
<p style="text-align: justify;"><strong><em>காங்கிரஸ் கடும் அதிருப்தி</em></strong></p>
<p style="text-align: justify;">அமைச்சர்கள் ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் விஜய் பிரதமர் ஆவார் என்று நேரடியாக பேசி வரும் நிலையில், இதற்கு கடும் எதிர்வினை புரிந்திருக்கிறது காங்கிரஸ். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஸ் பேசும்போது, ராகுல்காந்தியை பிரதமராக தவெக ஏற்கவில்லையென்றால் அமைச்சரவை மட்டுமல்ல கூட்டணியில் இருந்துகூட காங்கிரஸ் வெளியேறும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலு, இதைபற்றியெல்லாம் விஜயை தரப்பு கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவர்கள் விஜயின் பிம்பத்தை தேசிய அளவில் கட்டமைக்கும் முயற்சிகளில் கவனமாக ஈடுபட்டு வருகிறனர்.</p>
<p style="text-align: justify;"><strong><em>டார்கெட் 2034</em></strong></p>
<p style="text-align: justify;">ஆனால், முதல்வர் விஜயின் இலக்கு வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவது இல்லை. மாறாக, அதற்கு அடுத்து வரும் 2034ஆம் ஆண்டும் நடைபெறவுள்ள தேர்தலே விஜயின், விஜயின் அணியினரின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சோதனை ஓட்டமாக வரும் 2029 தேர்தலை மையப்படுத்தி, இப்போதே அதற்கான பணிகளை அவர்கள் கட்டமைத்து வருகின்றனர். குறிப்பாக, முதலில் தென் மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து, விஜயை தென்மாநில அளவில் பிரதிநிதித்துவப்படுத்தற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;"><strong><em>அ இ அதிமுக மாதிரி தே வெ க ?</em></strong></p>
<p style="text-align: justify;">அதே நேரத்தில் தேசிய அளவில் கட்சியை வளர்க்க விரும்பிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா அதிமுகவை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயரை மாற்றி, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட சில மாநிங்களில் கட்சியை வளர்ப்பதற்கான முன்னெடுப்புகளை எடுத்தார். ஆனால், பின்னர் அதில் பெரிய ஆர்வம் காட்டாததால் பெயருக்கு சில மாநிலங்களில் அதிமுக இருந்து வந்தது. ஆனால், முதல்வர் விஜயும் தனது தமிழக வெற்றிக் கழகத்தினை தேசிய அளவில் வளர்க்க ஜெயலலிதா போன்றே திட்டமிட்டு வருவதாகவும் அதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய வெற்றிக் கழகம் என வரும் காலங்களில் பெயரை மாற்றி தேசிய அளவில் கட்சியை வளர்க்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">ஆனால், சந்திரசேகர் ராவ் போல, பெயரை மாற்றி வீழ்ச்சியடைந்துவிடக் கூடாது என்பதிலும் விஜய் தரப்பு உறுதியாக இருக்கிறது. அதற்காக ஒவ்வொரு அடியாக பார்த்து, பார்த்து எடுத்து வைக்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;"><strong><em>தென்னிந்தியாவின் முகமாகும் விஜய்</em></strong></p>
<p style="text-align: justify;">தமிழக முதல்வர் ஆன பிறகு, விஜயின் கிரேஸ் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியான நிலையில், விஜயை முதலில் தென்னிந்தியாவின் முகமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அடிப்படையாக வைத்தே தேசிய அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக முதல்வர் விஜயை மாற்றுவதற்கான திட்டங்களை அவரது அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">வேட்டி கட்டிய தமிழன் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> கருத்து தெரிவித்திருந்தார். மீண்டும் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> மூலமாக அதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்கள் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>வினர்</p>
Source: Read Full Article