
<p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a>, பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் அவதூறு பேசியதாக இன்று விசாரணைக்காக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, இரவில் விசாரணை முடிந்து கிளம்பியபோது, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பேசாததை திரித்து வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், தான் இரட்டை அர்த்தத்தில் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், ஒரே அர்த்தத்தில் தான் பேசியதாகவும், இந்த கைது நடவடிக்கைகாக பயப்படாமல், மீண்டும் விவசாயிகளுக்காக பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<h2>“நான் தவறாக எதுவும் பேசவில்லை, கட், காபி, பேஸ்ட் செய்து வெளியிட்டுள்ளனர்“</h2>
<p>திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த <a title="உதயநிதி ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/udhayanidhi-stalin" data-type="interlinkingkeywords">உதயநிதி ஸ்டாலின்</a>, நான் பேசாத ஒரு விஷயத்தை, கட், காபி, பேஸ்ட் செய்து, சில விஷயங்களை சேர்த்து வெளியிட்டுள்ளனர் என்றும், தான் யாருக்காகவும் பேசவில்லை, விவசாயிகளுக்காகத் தான் பேசினேன் என்றும் தெரிவித்தார்.</p>
<p>மேலும், இந்த அரசு டைவர்ஷன் டேக்டிஸ் பாலிசியையே கடைபிடிப்பதாகவும், முழுக்க முழுக்க பொய் செய்திகளையே வெளியிட்டு டைவர்ஷன் செய்வதாகவும், அதை நேற்று பேசும்போதே தான் சொன்னதாகவும் உதயநிதி கூறினார்.</p>
<p>மாநிலத்தில் ஏதாவது ஒரு பிரச்னை எழும்போது, அதை திசைதிருப்ப ஏதாவது ஒரு பிரச்னையை எடுத்து, முதலமைச்சர் ஃபோட்டோ சூட் நடத்தி, திமுகவின் திட்டங்களை சென்று சுற்றிப்பார்த்து, போஸ் கொடுத்து அதை ரீல்ஸ்-ஆக வெளியிடுவது என இந்த அரசு இருப்பதாக உதயநிதி குற்றம்சாட்டினார்.</p>
<p>மேலும், <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> நிர்வாகிகளே அவர்களது சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பல குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களை கூறி இருப்பதாகவும், அதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல், டைவர்ஷன் யுக்தியையே இந்த அரசும், முதலமைச்சரும் பயன்படுத்துவதாக உதயநிதி விமர்சித்தார்.</p>
<p>அதைப்போலத் தான், தான் நேற்று பேசியது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, எழுச்சியை ஏற்படுத்தியதால், அதை எப்படியாவது திசைதிருப்ப வேண்டும் என்றும், நாளை சட்டமன்றத்தில் எப்படியும் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிந்துகொண்டு, அதை முடக்குவதற்காக, இன்று காலை, தான் பேசாத ஒரு விஷயத்தை பேசியதாக திரித்து, கட், காபி பேஸ்ட் செய்து, அதை தேசிய ஊடகங்கள் வரை கொடுத்து பரப்பிவிட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, இன்று காலை தன்னை கைது செய்ய காவல்துறை வந்ததாகவும் உதயநிதி கூறினார்.</p>
<p>மேலும், அப்போதே இந்த நடவடிக்கையை நகைச்சுவையாக பார்ப்பதாக செய்தியாளர்களிடம் கூறியதோடு, இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன், சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். </p>
<h2>“தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தாயாகவும், சகோதரியாகவும் தான் பார்க்கிறேன்“</h2>
<p>தொடர்ந்து பேசிய உதயநிதி, இன்று விசாரணை என்ற பெயரில் தஞ்சாவூர் வரை அழைத்துச் செல்ல முற்பட்டு, செங்கிப்பட்டி என்ற இடத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பல கேள்விகளை கேட்டுவிட்டு அனுப்பியதாகவும், இந்த பிரச்னையை சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறினார்.</p>
<p>மேலும், தான் யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ, தாழ்த்திப் பேச வேண்டும் என்ற நோக்கத்திலோ, குறிப்பாக பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் பேசவில்லை என்றும், தனக்கும் குடும்பம் உள்ளதென்றும், அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மாரையும் தன் குடும்பமாக, தாயாக, தங்கையாக பார்ப்பதாகவும் நெகிழ்ச்சியாக கூறினார்.</p>
<p> </p>
<p> </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-benefits-of-banana-know-who-should-avoid-eating-banana-daily-270057" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article