
<p>தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆட்சியே நடந்து வந்த சூழலில், தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலே வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்தது.</p>
<h2><strong>அனுபவமற்ற அமைச்சரவை:</strong></h2>
<p>செங்கோட்டையன் தவிர முதலமைச்சர் விஜய் உள்பட <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அமைச்சரவையில் உள்ள அனைவருக்கும் இதுவே முதல் முறையாகும். முதல் முறை சட்டமன்ற உறுப்பினரானதும் அமைச்சர் பதவியும் கிடைத்துள்ளது. அரசியல் அனுபவமே குறைவானவர்கள் என்பதால் அவர்களுக்கு மூத்த ஐஏஎஸ், அந்தந்த துறை செயலாளர்கள் அறிவுரை வழிகாட்டுதல் மிக மிக அவசியமாகிறது.</p>
<p>ஆனால், இந்த ஆட்சி அமைந்தது முதலே அதிகாரிகள் அமைச்சர்களுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகிறது. உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் திருப்பதி பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். </p>
<p>அரசு ஆவணம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பு பொதுவெளியில் எடுத்துச் செல்வது மிக மிக தவறான ஒன்றாகும். அவர் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதற்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.</p>
<h2><strong>நெறிமுறைகளை சொல்லித் தர மறுக்கிறார்களா அதிகாரிகள்?</strong></h2>
<p>முதன்முறை அமைச்சராகியுள்ள அவருக்கு அந்தந்த துறை அதிகாரிகள் யாரும் இதுதொடர்பாக அறிவுரை வழங்கவில்லையா? சிக்கலாகும் என்று எச்சரிக்கையாகவில்லையா? என்றும் கேள்வி பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, அரசின் சாசன பொறுப்புகளில் இருப்பவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போது மத்திய அரசிடம் தகவல் தெரிவித்து முறையான அனுமதியுடன் செல்ல வேண்டும் என்பதும் நெறிமுறை ஆகும்.</p>
<p>ஆனால், அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் மத்தி அரசு வழங்கும் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டில் செல்லாமல் தங்களது சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றதும் சர்ச்சையானது. முதன்முறை அமைச்சர்களான அவர்களுக்கு இந்த நெறிமுறை தெரியாவிட்டாலும், அவர்களது துறை அதிகாரிகள் இந்த அடிப்படை தெரியாதவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் இதை அமைச்சர்களுக்கு தெரிவித்தனரா? என்ற கேள்வியும் பலரால் முன்வைக்கப்படுகிறது.</p>
<h2>நிதிநிலை அறிக்கை:</h2>
<p>இதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு கடந்த ஆட்சியில் இருந்த பல்வேறு துறைகளின் நிதி வேறுபாடுகள், லீக்கேஜ்கள் பற்றி அந்த துறை அதிகாரிகள் உரிய தரவுகளை அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் எதிரொலி பட்ஜெட்டிலும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p>
<h2><strong>ஒத்துழைக்க மறுக்கிறார்களா அமைச்சர்கள்?</strong></h2>
<p>ஒருபுறம் அதிகாரிகள் அமைச்சர்கள் புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தாலும், அதிகாரிகள் பலரும் கூறும் வழிகாட்டி நெறிமுறைகளை அமைச்சர்கள் சிலர் பின்பற்ற மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. </p>
<p>இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வந்தாலும் அது தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இந்த விவகாரத்தில் விதிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் விஜய் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> விரைவில் முக்கிய முடிவு எடுப்பார் என்று கருதப்படுகிறது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/agriculture/pm-kisan-key-update-on-the-rs-2-000-deposit-into-farmers-bank-accounts-269753" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article