
<p>அடுத்தவர்களை குறை, அறிவுரை சொல்கிறார்களே தவிர தவெகவினர் எதையும் பின்பற்றுவதில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். </p>
<p>நேர்காணல் ஒன்றில் பேசிய டிடிவி தினகரன், “தவெக ஆட்சி அமைந்தபோது இது முதல் கோணல், முற்றிலும் கோணல் என சொன்னேன். நேர்மையானவர்கள், தூய சக்தி என சொல்லி வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைப்பதற்கே பெரும்பான்மை கிடைக்காதபோது என்னவெல்லாம் குறுக்கு வழியைப் பயன்படுத்தினார்கள். இதுவரை நாம் கேள்விப்படாத செயல்கள் எல்லாம் செய்தார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் 126 எம்.எல்.ஏ.,க்களை எதிர்க்கட்சியில் தேர்வு செய்து இந்த தவெக ஆட்சிக்கு கடிவாளம் போட்டிருக்கிறார்கள். </p>
<p><iframe title="DMK MLA Controversy speech |CM முதல் அமைச்சர்கள் வரை.. திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!உதயநிதி REACTION" src="https://www.youtube.com/embed/N1L_YhbJjR8" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>நாங்கள் மாற்றம், வளர்ச்சியை தருவோம் என தவெக சொன்னார்கள். சினிமா கதைகளைப் போல முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, தவெக அமைச்சர்கள் ரீல் தான் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு முன் துப்புரவு பணியாளர்கள் போராடிக் கொண்டிருந்தபோது தவெக என்னவெல்லாம் செய்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தப்பிறகு காவல்துறையை வைத்து கைது செய்த கதையெல்லாம் அனைவருக்கும் தெரியும். தவெக சொல்வதற்கும் செய்வதற்கும் சம்பந்தமே கிடையாது. </p>
<p>தனது தவெக எம்.எல்.ஏ.,க்களை தக்க வைக்கும் பொருட்டு அடுத்தவர்களை குறை, அறிவுரை சொல்கிறார்களே தவிர, அதை அவர்கள் பின்பற்ற மறுக்கிறார்கள். இந்த ஆட்சி நேர்மையான ஆட்சி, ஊழல் இல்லை என சொன்னாலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 6 மாத கால அவகாசம் கேட்ட நிலையில், 3 மாதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 3 மாதம் பார்க்கலாம். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களை விமர்சிப்பதை தடுக்க அனைவருக்கும் கார் வழங்க முடிவு செய்திருக்கலாம். </p>
<p>எனக்கு தெரிந்து 10,15 எம்.எல்.ஏ.க்களுக்கு கார் இல்லாமல் இருக்கலாம். அதனை <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> கட்சி நிதி அல்லது சொந்த பணத்தில் இருந்து வாங்கி கொடுக்கலாம். தமிழ்நாடு பல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. இதுபோன்ற வீண் செலவுகளை தவிர்க்கணும். அந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். அதற்கு பதிலாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கலாம். இன்னும் எத்தனையோ வாக்குறுதிகளை நிறைவேற்றிருக்கலாம். </p>
<p>அதையெல்லாம் விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை கிண்டலடிப்பதும், அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல அமைச்சர்கள் சட்டமன்றத்தில் செயல்படுவதையும் பொதுமக்கள் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் காலத்தில் உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய முன்னாள் நண்பர்கள் என்னையும், சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதியது, கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடந்தது என சொல்லலாம். அமமுக, அதிமுக இரண்டும் வேறு அல்ல. என்றைக்கு அம்மாவின் தொண்டன் என்ற ரீதியில் அவர்களுடன் நான் இருப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/spiritual/where-should-a-peacock-feather-be-placed-in-the-house-to-attract-a-flow-of-money-271998" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article