
<p><strong>Sheikh Hasina:</strong> ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற தங்களது கோரிக்கையை இந்தியா நிராகரித்ததற்கு வங்கதேசம் அதிருப்தி தெரிவித்துள்ளது.</p>
<h2><strong>”வங்கதேசம் திரும்புகிறேன்” - </strong>ஷேக் ஹசீனா</h2>
<p>கடந்த 2024ம் ஆண்டு அந்நாட்டில் வெடித்த இளைஞர்களின் புரட்சியால், ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் பல கடுமையான தண்டனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் வங்கதேசம் திரும்பும்போது தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதை கண்டு அஞ்சவில்லை என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்வினையாற்றியுள்ள டாக்கா, ”தலைமறைவான தண்டனைபெற்ற இனப்படுகொலையாளி தான் ஹசினா” என விமர்சித்துள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/what-should-you-look-for-when-buying-new-helmet-details-in-pics-270115" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிவிப்பு</strong></h2>
<p>வங்கதேசத்தில் இருந்து ஹசீனா வெளியேற்றப்பட வழிவகுத்த 2024 ஜூலை எழுச்சியை முன்னிட்டு, டெல்லியின் வெளிநாட்டு நிருபர்கள் மன்றத்தில் காணொளி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது, "எனது சொந்த எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் வங்கதேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறேன். நாடு திரும்பும் எனது முடிவு அதிகாரத்திற்கானதல்ல. அது வங்கதேசத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கானது. டிசம்பரில் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்படுவதற்கு அஞ்சவில்லை . என் மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையை அச்சத்தால் தீர்மானிக்க முடியாது. நான் டிசம்பரில் அவர்களிடம் திரும்புவேன். எனக்கு என்ன கதி காத்திருந்தாலும், நான் என் மக்களிடம் திரும்புவேன். நான் தடுத்து வைக்கப்படலாம். நான் சிறைக்கு அனுப்பப்படலாம். ஆனால் நான் திரும்புகிறேன்” என அறிவித்தார்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/Uzhnu9hfHD0?si=sAOb4WXbbeG9OI3n" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>சர்வதேச அமைப்புகளுக்கு கோரிக்கை</strong></h2>
<p>தொடர்ந்து பேசுகையில், “ஜனநாயகத்திற்கான மக்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வங்கதேசத்தின் எதிர்காலம் ஜனநாயக நிறுவனங்களை மீட்டெடுப்பதைப் பொறுத்தது. அவாமி லீக் மீதான தடையை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தை மீட்டெடுத்தல். நீதித்துறை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் மக்களுக்குச் சேவை செய்வதை உறுதி செய்தல் வேண்டும். வங்கதேசத்தின் நிலைமை ஒரு உள்நாட்டு நெருக்கடி மட்டுமல்ல. அது பிராந்திய அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மனித கண்ணியத்தையும் பாதிக்கிறது. வங்கதேசம் செல்வதற்கான தேதி மற்றும் மற்ற எல்லாவற்றையும், நிச்சயமாக, நேரம் வரும்போது நான் அனைவருக்கும் சொல்வேன். வங்கதேச மக்கள் மிகவும் துன்பப்பட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன், அதனால்தான் நான் திரும்பிச் செல்ல முடிவு செய்தேன். டிசம்பர் மாதம் வங்கதேசத்தின் வெற்றி மாதம் எனவே, நான் டிசம்பர் மாதத்தில் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்" என்று ஹசினா தெரிவித்துள்ளார்.</p>
<p><a title="TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-august-6th-rain-alert-for-15-district-270239" target="_self">இதையும் படியுங்கள்: TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை</a></p>
<h2><strong>வெளியுறவு அமைச்சகம் கடும் அதிருப்தி</strong></h2>
<p>ஹசீனாவிற்கு பதிலடி தரும் விதமாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தலைமறைவாக உள்ள, இனப்படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஹசீனா டெல்லியில் ஊடகங்களுடன் நேரலையில் உரையாட அனுமதிக்கப்பட்டது குறித்து நாங்கள் கடும் கோபம் கொள்கிறோம். அங்கு அவரும் அவரது கூட்டாளிகளும் வங்கதேசத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராகக் கடுமையான வசைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். நமது இருதரப்பு உறவுகள் சீர்குலைப்பதில் இந்த நிகழ்வின் சாத்தியமான பின்விளைவுகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு முன்கூட்டியே கவலைகள் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த பொது நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டது குறித்து டாக்கா ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article