
<p>காமன்வெல்த் விளையாட்டு தொடரின் 57 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா இந்த தொடருக்கு முன் ஒரு தீராத நோயுடன் மருத்துவமனையில் போராடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. </p>
<p>ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கியது. இன்றுடன் இப்போட்டிகள் நிறைவடைகிறது. இதில் நேற்று நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா, அயர்லாந்தின் நடப்பு சாம்பியனாக இருந்த மைக்கேலா வால்ஷைத் தோற்கடித்து தங்கம் வென்றார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற ஜெய்ஸ்மின் லம்போரியா அந்த சாதனையை முறியடித்தார். </p>
<p>இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாக விளையாட்டு மைதானத்திற்கு வெளியே அவரின் வாழ்க்கை பெரும் போராட்டமாக அமைந்தது தெரிய வந்துள்ளது. அதாவது மங்கோலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. அப்போது ஜெய்ஸ்மின் லம்போரியாவுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் போட்டிகளில் பங்கேற்றார். மிகவும் கடினமான மூன்று சுற்றுகளில் போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஜெய்ஸ்மின் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதுமட்டுமில்லாமல் நேரடியாக காமன்வெல்த் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். </p>
<p>அந்த போட்டித்தொடர் முடிந்ததும் ஜெய்ஸ்மின் உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்அட்டது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தலையில் அடிபட்டதால் மூளையதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் மருத்துவ பரிசோதனையில் பெரிய அளவு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இந்தியா திரும்பிய அவர், மீண்டும் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன பாதிப்பு என்பதைக் கூட கண்டறிய முடியவில்லை.</p>
<p>இந்த உடல்நல பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் செக் குடியரசில் நடைபெற்ற இந்தியாவின் பயிற்சி முகாமில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது. காமன்வெல்த் போட்டிக்காக ஜூலை 1 ஆம் தேதிதான் மீண்டும் ஜெய்ஸ்மின் லம்போரியா பயிற்சியை தொடங்கினார். நோய் பாதிப்பால் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்த அவருக்கு பயிற்சியாளர்கள், உளவியலாளர் ஆகியோர் ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தினர்;. முடிவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே களமிறங்கிய ஜெய்ஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். </p>
<p>2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அரியானா மாநிலம் பிவானியில் பிறந்த ஜெய்ஸ்மின் லம்போரியா இந்திய ராணுவத்தில் நைப் சுபேதாராக உள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பு சேர்த்தார். இதனிடையே காமன்வெல்தில் தங்கம் வென்ற அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.</p>
Source: Read Full Article