
<p><span dir="auto">அமெரிக்க வீரர்களை கொல்வது தொடர்பாக, ஈரான் ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வீரர்களை கொல்வதற்கோ அல்லது பிடிப்பதற்கோ 30 ஆயிரம் டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் நேற்று அறிவித்தது. மேலும், ஒரு பெண் இதை செய்தால், வெகுமதி இரட்டிப்பாக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது. </span></p>
<h2><span dir="auto">பதற்றத்திற்கு நடுவே வெளியான அறிவிப்பு</span></h2>
<p><span dir="auto">அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், டெஹ்ரானின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த போரின் முடிவு தெளிவாகத் தெரியவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது.</span></p>
<p><span dir="auto">நிதி உதவி கோரி ஏராளமான கோரிக்கைகள் வந்த பின்னரே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி அமீர் ஹதாமி கூறியதாக, ஈரானின் அரசுக்குச் சொந்தமான ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹதாமி, வேறு எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. போருக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கப் படைகள் எதுவும் நிலைநிறுத்தப்படவில்லை.</span></p>
<h2><span dir="auto">அமெரிக்க வீரர்களை கொல்வதற்கு 5 பில்லியன் டோமன் வெகுமதி</span></h2>
<p><span dir="auto">IRNA-வின் தகவலின்படி, தாக்குதல் நடத்துபவரை கொல்பவர், பிடிப்பவர் அல்லது அமெரிக்க ராணுவ வீரரை ஒப்படைப்பவர் எவருக்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ராணுவத்திடமிருந்து 30,000 டாலர்கள் அல்லது 5 பில்லியன் டோமான்களுக்கு இணையான வெகுமதி வழங்கப்படும் என்று ஹதாமி கூறியுள்ளார். </span></p>
<p><span dir="auto">டோமான் என்பது ஈரானில் 10,000 ரியால்களுக்கு இணையான ஒரு அதிகாரப்பூர்வமற்ற அலகு ஆகும். மேலும், இந்தச் செயலை ஒரு பெண் செய்தால், வெகுமதி இரட்டிப்பாக்கப்படும். அதாவது, இதுபோன்ற செயல்களைச் செய்யும் பெண்கள் இரட்டிப்பு வெகுமதியைப் பெறுவார்கள். </span></p>
<p><span dir="auto">பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தப் பதற்றங்கள், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டபோது தொடங்கியது. மேலும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகக் கப்பல்கள் செல்வதையும் திறம்பட தடுத்துள்ளது.</span></p>
<h2><span dir="auto">இழுபறியில் இருக்கும் அமைதி ஒப்பந்தம்</span></h2>
<p><span dir="auto">எனினும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளின் தலைவர்களும் தத்தம் கோரிக்கைகளில் விடாப்பிடியாக இருப்பதால், ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.</span></p>
<p><span dir="auto">இத்தகைய சூழலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவ்வப்போது மிரட்டுவதும், அதன்பிறகு பின்வாங்குவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரானின் இந்த அறிவிப்பு, ட்ரம்ப்பை நிச்சயம் டென்ஷனாக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதற்கு அவர் எப்படி எதிர்வினையாற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.</span></p>
<p> </p>
<p> </p>
<p><span dir="auto"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/these-symptoms-appear-in-the-body-if-you-don-t-get-enough-sleep-health-tips-271436" width="631" height="381" scrolling="no"></iframe></span></p>
Source: Read Full Article