
<p><strong>Hyderabad Crime:</strong> தனியார் பள்ளி தாளாளரின் கொலையின் போது நடந்த ஒரு தொலைபேசி அழைப்பு மூலமாக, குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.</p>
<h2><strong>27 முறை கத்தி குத்து..!</strong></h2>
<p>நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர், அவரது வீட்டிலேயே கத்தியால் சராமாரியாக குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கண்டெடுக்கப்பட்டார். தீவிர விசாரணைக்கு பிறகு அதே பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் திருடியபோது போது கையும் களவுமாக பிடிபட்டதால் இந்த கொலையை நிகழ்த்தியதாக, மாணவர்கள் கூறியதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ரூபா எனும் அந்த பெண்மணி தனது வீட்டில் தனியாக இருந்தபோது, 27 முறை கத்தியால் கண்மூடித்தனமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/eat-this-vegetable-daily-if-sugar-is-increasing-diabetes-control-271768" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>தொலைபேசி அழைப்பால் சிக்கிய குற்றவாளிகள்:</strong></h2>
<p>ரூபா தனது அத்தையுடன் கடைசியாக தொலைபேசியில் நடத்திய உரையாடலில் இருந்து ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. தொலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆவதற்கு சற்று முன்பு. ரூபா தனது அத்தையுடன் பேசும்போது 'பாபு' என்ற வார்த்தையை உச்சரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது. 'பாபு' என்ற சொல் மாணவர்களை அழைப்பதற்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதால், ரூபாவின் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கக்கூடுமா என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உட்பட, ரூபாவையும் அவரது தினசரி பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்த நபர்களிடம் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. அந்த வகையில் கொலை சம்பவத்திற்குப் பிறகு அந்த பள்ளியை சேர்ந்த இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் திடீரென ஆடம்பரமாகப் பணம் செலவழித்தது, நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொள்வது போன்ற நடவடிக்கைகள் ஈடுபட்டது சந்தேகத்தை ஏற்படுத்த விசாரணை வேகம் பெற்றுள்ளது.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/tvc8A4zjjt0?si=BYhaEzpxakiq_x1S" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>இரண்டு மாணவர்கள் கைது - கொலைக்கான காரணம் என்ன?</strong></h2>
<p>சந்தேகத்தின் பேரில் இரண்டு மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், ஒரு ஐபோனையும் மீட்டனர். இது தங்களின் பெற்றோர் கொடுத்த பணம் என விசாரணையின் போது மழுப்பியுள்ளனர். ஆனால், அவற்றை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் மனித ரத்தத்தின் தடயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. குறிப்பாக ஒருவன் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டுவதில் ஆர்வம் காட்டி, விரைவாகப் பணம் சம்பாதிக்க ஆர்வம் காட்டி வந்துள்ளான்.</p>
<p>கொலை நடப்பதற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்பு அந்தச் சிறுவன் பையில் கைபேசி வைத்திருந்ததை அறிந்து, தலைமையாசிரியரும் சில பள்ளி ஊழியர்களும் கடுமையான கண்டித்துள்ளனர். தொடர்ந்து அவனை பள்ளி விடுதியிலிருந்து வெளியேற்றி வழக்கமான வகுப்புகளில் மட்டும் கலந்துகொள்ள ரூபா அனுமதிக்க முடிவு செய்தார். அவனது நடத்தை குறித்து அவனது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்தச் சம்பவமே ரூபாவின் வீட்டில் திருட அந்த சிறுவன் தூண்டியிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.</p>
<p><a title="TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்" href="https://tamil.abplive.com/news/politics/tamilnadu-govt-clarification-over-namakkal-kavignar-maligai-cm-vijay-cabin-alternative-tender-allegation-tn-politics-271766" target="_self">இதையும் படியுங்கள்: TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்</a></p>
<h2><strong>கொலை நடந்தது எப்படி?</strong></h2>
<p>ஆகஸ்ட் 11 அன்று பள்ளியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அன்று ரூபாவின் வீட்டில் கணிசமான அளவு பணம் இருக்கும் என்று அவன் நம்பியதாகக் கூறப்படுகிறது. ஐந்து நாட்களாக திட்டமிட்டு அந்த வீட்டிற்குள் மாணவர்கள் நுழைந்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, அந்த இரண்டு சிறுவர்களும் பிடிபடாமல் இருப்பதற்காக, கையுறைகளையும் ஒரு கத்தியையும் பயன்படுத்தியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் உள்ள இடம் உட்பட அப்பகுதியை நோட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 11 அன்று, சிறுவர்களில் ஒருவன் சுற்றுச்சுவரைத் தாண்டி ரூபாவின் வீட்டிற்குள் நுழைந்ததாகவும், மற்றொருவன் வெளியே காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. உள்ளே இருந்த சிறுவன் பணத்தைத் தேட, உள்ளே தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ரூபா மாணவனை கவனித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த சிறுவன், திருட்டைப் பற்றி காவல்துறையில் புகார் அளித்துவிடுவார் என்ற அச்சத்தில் கத்தியால் சராமாரியாக தாக்கியுள்ளார். பின்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்று, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் தான் அணிந்திருந்த ஆடைகளை ஒரு சாக்கடையில் வீசியதாகக் கூறப்படுகிறது.</p>
Source: Read Full Article