
<h2>முதலமைச்சர் விஜய்க்கு புதிய அலுவலக அறை</h2>
<p>தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், 50 வருடங்களுக்கும் மேலாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சரின் அறை தற்போது மாற்றப்படவுள்ளது. இதற்கான பணிகள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெண்டர் வெளியிடுவதற்கு முன்பாக முதலமைச்சர் அறைக்கான பணிகள் தொடங்கியது எப்படி என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. <br />இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அறையை அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றுவது தொடர்பாக பணிகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், </p>
<h2>டெண்டரில் முறைகேடு- டிடிவி கேள்வி.?</h2>
<p>அப்பணிக்கான டெண்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் முதலமைச்சரின் அறை மாற்றப்படுவது அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்தியில், அப்பணிகளுக்கான அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத்தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. கடந்த 13ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பை குறிப்பிடாமல் மறைத்திருப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மைமிக்க ஆட்சி என்று சொல்வதற்கான தகுதியை <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> அரசு இழந்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p>
<h2>இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்?</h2>
<p>முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன்? டெண்டர் அறிவித்த பின்பும் அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? என்ற மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வைத்திருக்கும் பதில் தான் என்ன? ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆட்சிதான் எங்களின் இலக்கு என வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், </p>
<h2>விதிமுறை மீறல்கள்</h2>
<p>அவருக்கான புதிய அறை மாற்றம் தொடர்பான டெண்டர்களிலேயே நடைபெற்றிருக்கும் இவ்வாறான விதிமுறை மீறல்கள், மற்ற துறைகளில் டெண்டர்கள் எப்படி வெளிப்படைத்தன்மையாக நடைபெறும் என்ற ஐயத்தை எழுப்புகிறது. எனவே, விளம்பரங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவுக்கு பயன்படுத்தாமல், தன் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்திட முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/which-bike-offers-better-mileage-the-bajaj-pulsar-or-the-hero-splendor-271476" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article