
<p>புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பூர்வீகத் தாயின் வழியாகவும் அவரது பிள்ளைகள் சாதிச் சான்றிதழ் மற்றும் பூர்வீக அடிப்படையிலான இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற முழு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தந்தை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தாயின் பூர்வீக உரிமையை பிள்ளைகளுக்கு மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p>
<h2>சான்றிதழ் வழங்க மறுப்பு</h2>
<p>புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த பெண்களை வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு புதுச்சேரி பூர்வீக நிலைச் சான்றிதழ் வழங்க அரசு நிர்வாகம் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.</p>
<p>தந்தையின் பூர்வீகம் மற்றும் இருப்பிடத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட பிள்ளைகளுக்கு பூர்வீகச் சான்றிதழுக்கு பதிலாக இடம்பெயர்ந்தவர் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதனால் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டுச் சலுகைகளை பெறுவதில் அவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் அவர்களது தாய்மார்கள் என மொத்தம் 26 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.</p>
<h2>அரசுத் தரப்பு வாதம்</h2>
<p>இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய சமூக அமைப்பு பாரம்பரியமாக தந்தைவழி சமூகமாக இருந்து வருவதால், ஒருவரின் சாதி மற்றும் சமூக நிலை தந்தையின் வழியிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.</p>
<p>மேலும், ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறத் தகுதியுள்ள ஒருவர் வேறு மாநிலத்துக்கு இடம்பெயரும்போது, அங்கு அதே இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், மத்திய அரசின் அறிவுறுத்தல்களையும் அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.</p>
<h2>மனுதாரர்கள் தரப்பில் வலுவான வாதம்</h2>
<p>மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் <a title="ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/mk-stalin" data-type="interlinkingkeywords">ஸ்டாலின்</a> அபிமன்யூ ஆஜராகி வாதிட்டார். சாதிச் சான்றிதழ் தந்தையின் வழியில் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16-வது பிரிவுகள் உறுதி செய்யும் சமத்துவம் மற்றும் பாலினச் சமத்துவத்துக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.</p>
<p>மேலும், பிள்ளைகள் புதுச்சேரியிலேயே பிறந்து வளர்ந்து, தங்களது தாயின் சமூக மற்றும் பண்பாட்டு சூழலிலேயே வாழும்போது, அவர்களின் தந்தை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காரணமாகக் காட்டி தாயின் பூர்வீக உரிமையை மறுக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.</p>
<h2>ஐகோர்ட் அதிரடி உத்தரவு</h2>
<p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்சக்ரவர்த்தி, பழமைவாத தந்தைவழி சமூகக் கோட்பாட்டை காரணம் காட்டி பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.</p>
<p>இதையடுத்து, புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட தாயின் சாதி மற்றும் சமூக நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவரது பிள்ளைகளுக்கு எஸ்.சி., எம்.பி.சி., ஓ.பி.சி. உள்ளிட்ட சாதிச் சான்றிதழ்களை வருவாய்த்துறை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>
<p>மேலும், புதுச்சேரி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசுப் பணிகளில் பூர்வீக வாசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளையும் சம்பந்தப்பட்ட பிள்ளைகள் பெற முழுத் தகுதியுடையவர்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<h2>சமூக ஆர்வலர்கள் வரவேற்பு</h2>
<p>பெண்களின் உரிமை மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் நீண்டகாலமாக நிலவி வந்த பூர்வீகச் சான்றிதழ் தொடர்பான சிக்கலுக்கு இந்த தீர்ப்பு முக்கியமான தீர்வாக அமையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>
<h2>அரசு மேல்முறையீடு</h2>
<p>இதற்கிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்ளடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், பூர்வீகத் தாயின் பிள்ளைகளுக்கான சாதிச் சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பான இந்த விவகாரம் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளில் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.</p>
Source: Read Full Article