
<p style="text-align: justify;">கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இருப்பினும், தற்போது கூட்டணி கட்சிகள் கொடுக்கும் பல்வேறு நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு, தனிப் பெரும்பான்மை பலத்துடன் நிலையான ஆட்சியைத் தொடர இடைத்தேர்தலை விரைவாகச் சந்திக்க முதல்வர் விஜய் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<h3 dir="ltr" style="text-align: justify;">கூட்டணி கட்சிகளின் தொடர் நெருக்கடி</h3>
<p dir="ltr" style="text-align: justify;">ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. மேலும் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுமட்டுமன்றி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி காங்கிரஸும், பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் அரசின் முக்கிய கொள்கை முடிவுகளில் தங்கள் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வி.சி.க.-வும் தொடர் குடைச்சல்களை அளித்து வருகின்றன.</p>
<h3 dir="ltr" style="text-align: justify;">சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கத் திட்டம்</h3>
<p dir="ltr" style="text-align: justify;">தற்போதைய கூட்டணி ஆட்சியில் கொள்கை முடிவுகள் எடுப்பதிலும் நிர்வாகத்தைச் செயல்படுத்துவதிலும் கூட்டணி கட்சிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. எனவே, த.வெ.க.-விற்குச் சொந்த பலம் இருந்தால் கூட்டணி கட்சிகளை ஓரம் கட்டிவிட்டு சுதந்திரமாக ஆட்சி நடத்தலாம் என த.வெ.க. தலைமை கருதுகிறது. இதன் காரணமாகவே காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த த.வெ.க. தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.</p>
<h3 dir="ltr" style="text-align: justify;">உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல்</h3>
<p dir="ltr" style="text-align: justify;">இதன் தொடர்ச்சியாக, காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தரப்பில் அவசர பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றால் கட்சியின் பலம் அதிகரிப்பதோடு, ஆட்சிக்குத் தேவையான தனிப் பெரும்பான்மையை எட்ட முடியும் என த.வெ.க. நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p>
Source: Read Full Article