
<h2><strong>"பத்திரம் உருவாக்குவதில் கவனம்"</strong></h2>
<p>சொத்து வாங்கும் போது அது தொடர்பான ஆவணங்களை சரி பார்ப்பதில் மக்கள் கவனம் செலுத்தும் அளவுக்கு தங்கள் பெயருக்கு மாற்றுவதற்கான பத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனக் குறைவாக செயல்படுகின்றனர். நீங்கள் வாங்கும் சொத்து வில்லங்கம் எதுவும் இல்லாதததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.</p>
<p>ஆனால் , அதே நேரத்தில் , உங்கள் பெயருக்கு உருவாக்கப்படும் புதிய பத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சொத்து பரிமாற்றத்துக்கான விற்பனை ஒப்பந்தம் , கிரையப் பத்திரம் ஆகியவற்றை யார் வாயிலாக தயாரிப்பது என்பதில் தெளிவாக செயல்பட வேண்டும்.</p>
<h2><strong>" ஆவணம் தயாரிப்பதில் கவனம் "</strong></h2>
<p>சொத்தின் பழைய ஆவணங்கள் அனைத்தும் சரியா இருக்கிறது என்று அமைதியாகி விடாமல் , அடுத்த ஆவணம் தயாரிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு சொத்து வாங்கும் போது அதன் மொத்த மதிப்பில், ஏழு சதவீதம் முத்திரை தீர்வை , 2 சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் ஏழு சதவீத முத்திரை தீர்வைக்கு இணையாக முத்திரை தாள்கள் வாங்கி பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.</p>
<p>சொத்தின் மதிப்பு குறைவாக இருந்த போது அதில், ஏழு சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கி பயன்படுத்துவதில் எவ்வித பிரச்னையும் எழவில்லை. ஆனால், தற்போது சொத்தின் கைமாறும் மதிப்பு, 60 லட்சம் ரூபாய் முதல் , ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செல்கிறது.</p>
<p>இந்த உயர் மதிப்பில், ஏழு சதவீதத்துக்கு முத்திரைத்தாள் வாங்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீங்கள் வாங்கும் சொத்தின் கைமாறும் மதிப்பு எதுவாக இருந்தாலும் , அதில் , ஏழு சதவீத முத்திரைத் தீர்வைக்கு முழுவதும் முத்திரைத் தாள் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.</p>
<h2><strong>" இ - ஸ்டாம்ப் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் " </strong></h2>
<p>இதில் குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முத்திரைத் தாள்கள் வாங்கி விட்டு மீதி தொகையை வங்கிக் கணக்கு வாயிலாக நேரடியா செலுத்தலாம். உங்கள் சொத்து பத்திரம் என்ன மதிப்பு முத்திரைத் தாளில் எழுதப்பட வேண்டும் என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு, அதிகபட்சமாக , 50,000 ரூபாய் வரையிலான மதிப்புகளில் முத்திரை தாள்களை வாங்கி பயன்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை.</p>
<p>ஆனால் , இதற்கு மேற்பட்ட முத்திரைத் தாள்களை வாங்கும் போது பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக , உயர் மதிப்பு முத்திரை தாள்களை வாங்குவதில் ரொக்க பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் வருமான வரித்துறை கண்காணிப்பில் வரும் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>எனவே, சொத்து பத்திரத்தில் குறைந்தபட்ச தொகைக்கு முத்திரைத் தாள்களை வாங்கி விட்டு , மீதித் தொகைக்கு இ - ஸ்டாம்ப், அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தலாம். சொத்து வாங்குவோர் இதையும் கவனமாக வைத்து செயல்பட வேண்டும் என்கின்றனர் சார்-பதிவாளர்கள்.</p>
Source: Read Full Article