
<p style="text-align: justify;">இந்தியாவின் இளம் பிரதமர்களில் ஒருவரும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவருமான முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 82-வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லி வீர் பூமி முதல் தமிழகம் வரை பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையொட்டி, ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட இடமான காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்திலும் முக்கிய மரியாதை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.</p>
<p style="text-align: justify;">கோவளத்தில் நடைபெற்ற தென் மண்டல முதலமைச்சர் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், அக்கூட்டம் முடிந்த பின்னர் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்திற்கு வருகை தந்தார். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நட்டு நினைவு கூர்ந்தார். மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் அருள்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.</p>
<h3 style="text-align: justify;">செய்தியாளர்கள் சந்திப்பும் முக்கிய கருத்துகளும்</h3>
<p style="text-align: justify;">அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், கடந்த காலங்களில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்திற்கு வருவது தனது வழக்கம் என்றும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இந்த இடத்தை அமைப்பதற்கு உதவியாக இருந்ததையும் நினைவுகூர்ந்தார். கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இங்கு வந்து அஞ்சலி செலுத்துவதை பெருமையாகவும் கடமையாகவும் கருதுவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியா முழுவதையும் காங்கிரஸ் கட்சிதான் பாதுகாத்து வருகிறது என்றும், காந்தி குடும்பத்தின் வளர்ச்சி, வலிமை மற்றும் முன்னேற்றமே இந்தியாவின் வளர்ச்சி என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரைவு தொடர்பாக தென் மாநிலங்கள் சார்பாகக் கலந்து கொண்ட அனைவரும் இளம் வயதினர் என்பதால் பெரிய விஷயங்களைப் பற்றிப் பேசவில்லை எனக் குறிப்பிட்டதுடன், தொகுதி மறுவரைவைப் பொறுத்தவரை 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படியே தென்னிந்திய மாநிலங்கள் தொடர வேண்டும் எனத் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இறுதியாக, "தமிழ்நாடு முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> அடுத்த பிரதமர்" என்பது குறித்த கேள்விக்கு, அதுபற்றித் தான் எதுவும் பேச விரும்பவில்லை எனக்கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.</p>
Source: Read Full Article