
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய கியாஸ் இணைப்பு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. </p>
<p style="text-align: justify;">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவிலும் மிகக் கடுமையாக எதிரொலித்தது. இதன் விளைவாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.</p>
<p style="text-align: justify;">பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பிய சூழலும், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் உணவுகளின் விலை உயர்ந்த நிலையும் உருவானது.</p>
<p style="text-align: justify;">இந்த தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் புதிய சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்குவதற்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்தது. தற்போது சர்வதேச அளவில் நிலைமை ஓரளவு சீரடைந்துள்ளதால், ஏற்கனவே கியாஸ் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு செய்தவுடன் உடனுக்குடன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.</p>
<p style="text-align: justify;">இருப்பினும், புதிய கியாஸ் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை இதுவரை நீக்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் எச்.பி (HPCL), ஐ.ஓ.சி (IOCL) மற்றும் பி.பி.சி (BPCL) ஆகிய இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களின் முகமைகள் மூலம் லட்சக்கணக்கான வீடுகளுக்குச் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகப் புதிய கியாஸ் இணைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாததால், மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: justify;">புதிய இணைப்பு பெற தினந்தோறும் கியாஸ் ஏஜென்சி அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், "அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை புதிய இணைப்பு வழங்க முடியாது" எனக்கூறி முகவர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">புதிய கியாஸ் இணைப்பு கிடைக்காததால், புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதிலும் மக்களுக்குப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்குச் சமையல் கியாஸ் இணைப்பு விவரங்கள் முதன்மையான சான்றாகக் கேட்கப்படுவதால், பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "கடந்த 6 மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளன. புதிதாகத் திருமணமான இளம் தம்பதியருக்குப் புதிய வீடுகளுக்குச் செல்லும்போது புதிய ரேஷன் கார்டு மற்றும் சமையல் கியாஸ் இணைப்பு பெற வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகிறது. ஆனால் தடையின் காரணமாக அவர்களால் புதிய இணைப்பைப் பெற முடிவதில்லை. தற்போது கியாஸ் விநியோகம் சீராக உள்ளதால், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு புதிய கியாஸ் இணைப்புகள் வழங்குவதற்கான தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர். </p>
<p style="text-align: justify;">இதுகுறித்து புதுமண தம்பதிகள் தரப்பில் கூறுகையில், திருமணம் கிராமத்தில் நடந்து இருந்தாலும் வேலையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதியில் தங்கி பணியாற்றும் நிலை உள்ளது. இதனால் நாங்கள் புதிய வீட்டிற்கு குடி வந்தவுடன் முதலில் தேவைப்படுவது கியாஸ் இணைப்புதான். அது இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே தடையை உடன் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.</p>
Source: Read Full Article