
<p>இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் 14 வயதிலே இவரை ஏலத்தில் ராஜஸ்தான் அணி எடுத்தபோது யார் இந்த சிறுவன் என்று அனைவரும் திரும்பி பார்த்தனர்.</p>
<h2><strong>சூர்யவன்ஷி:</strong></h2>
<p>சென்னை, மும்பை, பெங்களூர் என ஐபிஎல்-லின் அனைத்து ஜாம்பவான் அணிகளையும் தனது பேட்டால் அலறவிட்டார். இவரது அபார திறமையால் 15 வயதிலே இந்திய அணியில் இடம்பிடித்தார். இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக டி20 தொடரில் அறிமுகமான சூர்யவன்ஷி பெரியளவு ரன்களை குவிக்காவிட்டாலும் அதிரடியாக ஆடினார்.</p>
<h2>தொடர்ந்து அதிரடியில் மிரட்டல்:</h2>
<p>இந்த சூழலில், ஜிம்பாப்வே தொடரில் 3 டி20 போட்டியிலும் ஆடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலே 19 பந்துகளில் 50 ரன்களை விளாசி தனது அதிரடியை அனைவருக்கும் ஞாபகப்படுத்தினார். அடுத்த போட்டியிலும் 9 பந்துகளில் 20 ரன்களை விளாசினார். இன்று ஹராரேவில் நடந்து வரும் கடைசி டி20 போட்டியில் 49 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அசத்தினார்.</p>
<p>15 வயதிலே அதிரடியாக தொடக்க வீரராக அசத்தும் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் நீண்டகால சொத்தாக மாறியுள்ளார். இவரது அதிரடி தொடர்வதாலும் இவருக்கு பெரியளவு அழுத்தம் இல்லாததாலும் இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக நீண்டகாலம் இவர் ஆடுவார் என்று கருதப்படுகிறது. </p>
<h2><strong>தவிர்க்க முடியாத தொடக்க வீரர்:</strong></h2>
<p>மேலும், தற்போது டி20 போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக ஆடி வரும் சூர்யவன்ஷியை ஒருநாள் போட்டிகளில் ஆடும் அளவிற்கும் அணி நிர்வாகம் தயார் செய்து வருகிறது. சூர்யவன்ஷி தொடர்ந்து தனது அதிரடியை காட்டினால் இந்திய அணியில் தொடக்க வீரருக்காக போட்டியிட்டு வரும் மற்ற வீரர்களின் இடம் கண்டிப்பாக கேள்விக்குறியாகும். அவர்கள் மற்ற இடங்களில் ஆடுவதற்கு தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டியதும் அவசியம் ஆகிறது.</p>
<h2><strong>காய் நகர்த்தும் பிசிசிஐ:</strong></h2>
<p>தோனி, ரோகித், கோலி ஆகியோருக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட வீரர் என்று தற்போது ஆடும் அணியில் யாரும் இல்லை. ரோகித்தும், கோலியும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் சூழலில் அவர்கள் இல்லாத போட்டிகளில் ரசிகர்கள் எண்ணிக்கை நேரடியாகவும், தொலைக்காட்சியிலும் குறைந்து வருகிறது. இதனால், இந்திய அணியின் மிகப்பெரிய நட்சத்திர வீரராக சூர்யவன்ஷியை முன்னிறுத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.</p>
<p>இந்த போட்டியில் இஷான் கிஷன் 26 பந்துகளில் 29 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும் எடுத்தனர். ரிங்குசிங் கடைசியில் 25 ரன்கள் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறலாம். </p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/here-are-7-amazing-tips-for-safe-driving-during-rain-269066" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article