
<p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். </p>
<p>2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதில் பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களுக்கு இன்று கருணை அடிப்படையில் தகுதி அடிப்படையில் அரசுப்பணியை முதலமைச்சர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> வழங்கவுள்ளார். இதற்கு சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜோதிமணி விளக்கம் ஒன்றை அளித்து எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். </p>
<p>அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கரூரில் நடைபெற்ற அந்த கொடுந்துயரமான சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களின் வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அன்புக்குரியவர்களை இழந்த அந்த குடும்பங்களின் கண்ணீருக்கு எந்த நிவாரணமும் ஈடாகாது. ஒரு பணிநியமனம் மட்டும் அவர்கள் இழந்த வாழ்க்கையை மீட்டுத் தர முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அந்த குடும்பங்கள் இன்று எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p><iframe title="TVK MLA Saravanan |”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்" src="https://www.youtube.com/embed/ynL3NKvNqbI" width="1022" height="575" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>உயிரிழந்தவர்களில் பலர் தங்கள் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர்கள். எளிய,விளிம்புநிலை மக்கள்.பல குடும்பங்களில் பெண்கள் இன்று தனியாக குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்த நாளில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஒரு நிகழ்வைக் காணவும், தாங்கள் விரும்பும் ஒருவரை சந்திக்கவும் வந்த சாதாரண பொதுமக்களே. இது பொதுவாக எங்கும் நிகழக்கூடியதுதான். இவ்வளவு பெரிய ஒரு துயரம் நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.</p>
<p>இந்த நிலையில், அந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு பணி என்பது அவர்களின் இழப்பை ஈடு செய்யும் ஒன்று அல்ல; ஆனால், அவர்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சிறிய நம்பிக்கையும், பாதுகாப்பும் அளிக்கும் ஒரு ஆதரவாகும். வழங்கப்படும் பணிநியமனங்கள் எந்த விதிமுறைகளையும் மீறாமல், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்படும் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட எமது மக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடமும், சி.பி.ஐ. விசாரணையிலும் தங்களது வாக்குமூலங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.</p>
<p>இதனால் எமது மக்களின் மனநிலையில் புதிதாக எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடாது. நீதிக்கான விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதரவும் தொடர வேண்டும். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கான இந்த எளிய ஆதரவை அரசியல் கண்ணோட்டத்தோடும், கடுமையான விமர்சனப் பார்வையோடும் அணுகாமல், கருணையோடும், மனிதநேயத்தோடும் அணுக வேண்டும் எனறு எமது மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த குடும்பங்களின் துயரத்தை உணர்ந்து, அவர்களின் எதிர்காலத்திற்கு துணை நிற்போம்” என ஜோதிமணி தெரிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-maintain-beautiful-and-healthy-nails-at-home-266712" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article