
<p>இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடியது. இரு அணிகளும் மோதிய கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 2 ரன்னில் அவுட்டானார். </p>
<h2><strong>சூர்யவன்ஷி அதிரடி:</strong></h2>
<p>அதன்பின்பு வந்த இஷான் கிஷன் நிதானமாக ஆட வைபவ் சூர்யவன்ஷி மறுமுனையில் அதிரடி காட்டினார். அவரது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. இஷான் கிஷன் 26 ரன்களில் அவுட்டாக அதிரடி காட்டிய சூர்யவன்ஷி 49 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் ரிங்கு சிங் 25 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. </p>
<h2><strong>193 ரன்கள் டார்கெட்:</strong></h2>
<p>193 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரையன் பென்னட் ஆட்டத்தின் முதல் பந்திலே அவுட்டாக அடுத்து வந்த பென் கரன் - மயர்ஸ் ஜோடி நிதானம் காட்டியது. மயர்ஸ் 19 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா முதல் பந்திலே அவுட்டானார். 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பென் கரனும் 20 ரன்களில் அவுட்டானார்.</p>
<h2><strong>பந்துவீச்சு மிரட்டல்:</strong></h2>
<p>வெஸ்லி மாதவரே ஒத்துழைப்புடன் ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடினார். ஆனால், மயங்க் யாதவ், யஷ் தாக்கூர், அசோக் சர்மா, ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர். சூர்யான்ஷ் ஷெட்கே, அபிஷேக் சர்மாவும் நெருக்கடி சிறப்பாக பந்துவீச ஜிம்பாப்வே தடுமாறியது. வெஸ்லி மாதவரே 28 ரன்களில் அவுட்டாக, ப்ராட் எவன்ஸ் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். </p>
<p>கடைசி வரை தனி ஆளாக போராடிய ரியான் பர்ல் 43 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், அசோக் சர்மா, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p>
<h2><strong>ஒயிட்வாஷ்:</strong></h2>
<p>சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது பெற்றார். அயர்லாந்து, இங்கிலாந்து தொடரை இழந்த இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தொடரை முழுமையாக வென்றுள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/why-vinegar-is-used-in-food-details-in-pics-269044" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article