
<p><strong>UP Governor:</strong> குழந்தைகளின் வாழ்வில் பெற்றோர்கள் தொடர்ந்து தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என, உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் வலியுறுத்தியுள்ளார். </p>
<h2><strong>பெண்களுக்கு ஆளுநர் அட்வைஸ்:</strong></h2>
<p>சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தின் (CSJMU) 41வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையாற்றினார். அப்போது தொழில்முறை வெற்றியானது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதோடு கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசுகையில், “நீங்கள் ஐஏஎஸ் அதிகாரியானாலும் சரி, ஆசிரியரானாலும் சரி, முதலில் ஒரு சிறந்த தாயாக மாறுங்கள். வீட்டில் சமைக்கும் உணவை எப்படிச் சமைப்பது என்று அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/what-is-a-sperm-count-details-in-pics-266916" width="631" height="381" scrolling="no"></iframe></p>
<h2><strong>”சிறந்த தாயாக முக்கியத்துவம் அளியுங்கள்”</strong></h2>
<p>குடும்ப விழுமியங்கள் மற்றும் பெற்றோர் பொறுப்புகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பேசிய ஆனந்தி பென், திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் உயர்கல்வியையும் தொழில் வாழ்க்கையையும் தொடர வேண்டும் என்றும், அதே நேரத்தில் தங்கள் குடும்ப மற்றும் சமூக நலனுக்கும் பங்களிக்க வேண்டும் என்று ஊக்குவித்தார். எந்தவொரு நபரின் கல்வியும் திறன்களும் இறுதியில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் பிள்ளைகளுக்குப் பள்ளி அல்லது கல்லூரியில் சேர்க்கை கிடைத்தவுடன் தங்கள் பங்கு முடிந்துவிட்டது என்று கருதாமல், அவர்களின் வாழ்வில் பெற்றோர்கள் தொடர்ந்து தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.</p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/_OMVUCXrO2s?si=qTGu9YYIasFOHUZN" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<h2><strong>”குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள்”</strong></h2>
<p>மேலும், "குழந்தைகள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நமது மேற்பார்வையில் ஏற்படும் ஒரு சிறிய குறைபாடு கூட அவர்களின் எதிர்காலத்தைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும் என ஆளுநர் எச்சரித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த படேல், கல்வியின் மதிப்பை கல்விசார் சாதனைகளைக் கொண்டு மட்டும் அளவிடக்கூடாது என்றார். "பட்டங்கள் அதிகரித்து வந்தாலும், இதுபோன்ற குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடந்தால், அது நமது கல்வியின் உண்மையான நிலையையே பிரதிபலிக்கிறது. கல்வி அறிவைப் போலவே தார்மீக விழுமியங்களும் முக்கியமானவை” என்று ஆளுநர் ஆனந்தி பென் படேல் பேசினார்.</p>
<p><a title="JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்" href="https://tamil.abplive.com/entertainment/full-list-of-12-edits-censor-board-demanded-for-tn-cm-vijays-jana-nayagan-from-remove-tvk-to-falling-indian-flag-cinema-news-266910" target="_self">இதையும் படியுங்கள்: JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் - சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? - முழு லிஸ்ட்</a></p>
<h2><strong>ஆதரவும்.. எதிர்ப்பும்..</strong></h2>
<p>உத்தரபிரதேச ஆளுநரின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமல் படித்த பட்டதாரிகள் அலைந்து வருகின்றனர். பல்வேறு அரசு பணிகளுக்கு வயது வரம்பும் பெரிய சிக்கலாக உள்ளது. அப்படி இருக்கையில், சிறந்த தாயாவதற்கு முதன்மையான முக்கியத்துவம் அளித்தால் எங்களுக்கான பணி, பொருளாதார சுதந்திரத்தன்மை ஆகியவற்றை எப்போது அடைவது என இளம் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர். வேலையில் ஒரு சிறியை இடைவெளியை எடுத்துக்கொண்டாலே மீண்டும் பணி கிடைப்பது பெரும் சிரமமாகி விடுகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். மறுபுறம், பெற்றோரின் உரிய கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாததே இளைஞர்கள் பலரும் தடம்மாறி போவதாகவும், போதைப்பொருள் போன்ற ஆபத்தான பழக்கங்களுக்கு அடிமையாவதாகவும் சிலர் வாதிடுகின்றனர். இதனால், ஆனந்தி பென் பேசியதில் தவறு இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர். </p>
Source: Read Full Article