
<h2 dir="ltr"><strong>வேறு நபருக்கு திருமணம்</strong></h2>
<p dir="ltr">விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சேர்வாரன் என்பவரது மகள் ஈஸ்வரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் கடந்த 2019 - ம் ஆண்டு முதல் காதலித்துள்ளனர்.</p>
<p dir="ltr">ஆனால், ஈஸ்வரி வீட்டார் இருவரின் காதலை ஏற்க மறுத்து ஈஸ்வரியை வேறொரு நபருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளனர். திருமணமான ஒரே நாளில் அவருடன் வாழ மறுத்து ஈஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.</p>
<h2><strong>திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை</strong></h2>
<p>வீட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் ராஜ்குமாருடனான காதலை ஈஸ்வரி தொடர்ந்துள்ளார். ராஜ்குமார் ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார். நாளடைவில் இவர்களது காதல் ஊர் முழுவதும் தெரிய வந்துள்ளது.</p>
<p>இதனால், ஈஸ்வரி தனது பெற்றோரின் சம்மதத்தை பெற்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ராஜ்குமார் ஈஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததுடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.</p>
<h2><strong>4 மாத கர்ப்பம்</strong></h2>
<p>சில நாட்களில் இந்த விவகாரம் ஈஸ்வரிக்கு தெரிய வர அதை தாங்கிக் கொள்ள முடியாமல் ஈஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈஸ்வரியின் மரணம் குறித்து அவரது தந்தை சேர்வாரன் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணமாக கூமாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p>
<p>பிரேத பரிசோதனையில் ஈஸ்வரி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆர்.டி.ஒ விசாரணை நடத்தப்பட்டதுடன், சிசுவின் டி.என்.ஏ மற்றும் ராஜ்குமாரின் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டதில் தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரியின் கர்பத்திற்கு ராஜ்குமார் தான் காரணம் என்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிடைக்கப் பெற்ற டி.என்.ஏ மரபணு சோதனை முடிவில் உறுதியாகியுள்ளது.</p>
<p>இதையடுத்து சந்தேக மரண வழக்கை தற்கொலைக்கு தூண்டியது, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது ஆகிய பிரிவுகளாக மாற்றி இருவேறு பிரிவுகளின் கீழ் எஸ்.பி கௌதம் கோயல் உத்தரவின் பேரில் பதியப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆலோசனைப்படி, கூமாபட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் , ராஜ்குமாரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
<p>காதல் ஏமாற்றதால் 4 மாத சிசுவுடன் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 6 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணை ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய இளைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் கூமாபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.</p>
Source: Read Full Article