
<p>சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல் களம் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது. இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக தனது எம்எல்ஏ-க்களை ஒவ்வொருவராக இழந்து வருவதுடன் முக்கிய நிர்வாகிகளையும், முக்கிய தலைவர்களையும் இழந்து வருகிறது.</p>
<h2><strong>இன்னும் இணையாத சி.வி.சண்முகம்:</strong></h2>
<p>இந்த சூழலில், சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதலே எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் சிவி சண்முகம். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் இருவரும் தவெக-வில் இணைந்து விட்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியில் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியவரே சி.வி.சண்முகமே ஆவார். தவெக-விற்கு ஆதரவு அளிப்பது, தவெக-வுடன் கூட்டணி அமைப்பது ஆகியவற்றில் உறுதியாக இருந்த சிவி சண்முகம் இதுவரை தவெக-வில் இணையாமலே உள்ளார்.</p>
<h2><strong>காரணம் என்ன?</strong></h2>
<p>இதற்கு என்ன காரணம்? என்ற தகவல் வெளியாகி வருகிறது. தவெக-வில் அதிமுக-வினர் கூடாரம் அடித்து வருவது கட்சியின் கீழ்மட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பலரது மத்தியிலும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. இந்த சூழலில், தவெக-வில் இணைய ஆர்வமாக உள்ள சிவி சண்முகம் தனக்கு கட்சியில் மாநில அளவில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறார்.</p>
<p>இது தவெக தலைமைக்கு சற்று தயக்கத்தை உண்டாக்கி வருகிறது. செங்கோட்டையன் தேர்தலுக்கு முன்பே தவெக-வில் இணைந்ததால் அவரை தவெக-வினர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது வரும் அதிமுக-வினர் ஆளுங்கட்சியாக தவெக இருப்பதாலே இந்த பக்கம் வருவதாக வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், சிவி சண்முகத்திற்கு மாநில அளவில் பொறுப்பு தந்தால் அது தவெக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளுக்கு அதிருப்தியை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.</p>
<h2><strong>ஆளுநர் விசாரணை:</strong></h2>
<p>மேலும், அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெக-வில் இணைந்தது குறித்து ஆளுநர் அர்லேகரிடம் ஒவ்வொரு கட்சியினரும் புகார் அளித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள நிலையில், இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏ-க்கள் புதியதாக தவெக-வில் இணைவதையும் தவெக தலைமை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சிவி சண்முகம் தவெக-வில் இணைவதற்கு தாமதம் ஆகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.</p>
<p>அதேசமயம், அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கில் உள்ள சிவி சண்முகம் தொடர்ந்து கருத்து வேறுபாட்டுடனே கட்சியில் நீடிப்பதும் சவாலாக உள்ளது. சிவி சண்முகம் மீதான அதிருப்தியாளர்கள் வசம் தற்போது விழுப்புரம் மாவட்டத் தலைமைப் பொறுப்பு இருப்பதால் தினசரி மாவட்ட அதிமுக-விலும் ஏதேனும் குடைச்சல் உண்டாகி வருகிறது. இதன் காரணமாக சிவி சண்முகமும் <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a>-விற்கு சற்று அழுத்தம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/petrol-and-ev-hybrid-suvs-cars-releasing-very-soon-266846" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article