
<p>பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, </p>
<p>"வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்" (கிராமியம்) [VB-GRAMG] திட்டச் செயலாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> கடிதம் எழுதியுள்ளார்.</p>
<h2><strong>நிதிச்சுமை:</strong></h2>
<p>அக்கடிதத்தில், 'விகசித் பாரத்-ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]' திட்டத்தின் செயலாக்கம் 01.07.2026 அன்று முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக தாம் இக்கடிதத்தை எழுதுவதாகத் தெரிவித்து, இப்புதிய திட்டத்தின் நிதிப்பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டு ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துமெனினும், 'VBGRAMG சட்டம், 2025'-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியமாகிறது. </p>
<h2><strong>கிராமப்புற வேலைவாய்ப்பு பாதிப்பு:</strong></h2>
<p>அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை கள அளவில் தடையின்றியும் திறம்படவும் செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள கிராமப்புற மக்களையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<h2><strong>கடும் நிதிச்சுமை:</strong></h2>
<p>மேலும், நிதிப்பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம். கட்டுமானப் பொருட்கள் (Material) மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற வீதத்தைக் கட்டாயமாக்குகின்றன என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். </p>
<h2><strong>100 சதவீத நிதி உதவி:</strong></h2>
<p>நாட்கள் குறைய அதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை வாய்ப்புள்ளதுடன் பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடரவேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.</p>
<h2><strong>சமச்சீரற்று நிதி ஒதுக்கீடு:</strong></h2>
<p>மேலும், இத்திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும். மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகளில், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையினைக் (Micromanagement) கொண்டு வருவதுடன் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது தொடர்புடைய மாநிலத்தின் சமூகப் பொருளாதாரப் பன்முகத் தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறுவதுடன், அடிமட்ட அளவில் சமச்சீரற்ற நிதியொதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>
Source: Read Full Article