
<p>தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடந்த <a title="தவெக" href="https://tamil.abplive.com/topic/tvk" data-type="interlinkingkeywords">தவெக</a> பரப்புரையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது புதியதாக பொறுப்பேற்ற <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/tvk-vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> தலைமையிலான அரசு உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியது.</p>
<h2><strong>பணி நியமன ஆணை ரத்து:</strong></h2>
<p>கருணை அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. </p>
<h2><strong>நீதிமன்றத்தில் நடந்தது என்ன?</strong></h2>
<p>இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவி கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சுய வேலைவாய்ப்பு வழங்கி பயிற்சி வழங்கி ஏன் தொழில் முனைவோராக மாற்றக்கூடாது என்றும், அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினர்.</p>
<p>மேலும், தமிழக அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதாரண பணியல்ல, அது ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே என்றும் தெரிவித்தனர்.</p>
<p>பின்னர் கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்குவீர்களா? தினசரி சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். </p>
<p>தமிழக அரசு இந்த வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில் 31 பேருக்கு பணி வழங்கப்பட்டது அரசின் கொள்கை முடிவு. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர்.</p>
<h2><strong>மேல்முறையீடு செய்யுமா தமிழக அரசு?</strong></h2>
<p>மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பு பெரும் பரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த தீர்ப்பால் 41 பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். விஜய்யின் தலைமையிலான ஆட்சி வழங்கிய பணி நியமன ஆணையை நீதிமன்றம் ரத்து செய்திருப்பது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>
Source: Read Full Article