
<h2 dir="ltr"><strong>8 - ஆண்டுகளாக குழந்தை இல்லை</strong></h2>
<p dir="ltr">விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த சாமி என்பவரது மகன் மணி (வயது 34) இவர் அருகில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அப்பனேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி ( வயது 27) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சங்கராபுரத்தில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் 8 ஆண்டுகளா குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.</p>
<h2 dir="ltr"><strong>மனைவி மீது சந்தேகம் </strong></h2>
<p>இந்நிலையில் திவ்ய பாரதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி கணவர் மணி சந்தேகிப்பதாகவும், அதன் காரணமாக தினமும் குடித்து விட்டு வந்து சண்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி சண்டை போட்டு மனைவியை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.</p>
<p>இந்த நிலையில் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த மணி மனைவியிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதில் திவ்யபாரதி தள்ளி விட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இது குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<p>பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மணியின் மனைவி திவ்ய பாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. தான் தள்ளி விட்டதில் வழுக்கி விழுந்து அடிபட்டு உயிரிழந்ததாக, முதலில் தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>கணவனை கத்தியால் குத்திய மனைவி</strong></h2>
<p>காவல்துறை நடத்திய குறுக்கு விசாரணையில் மனைவி திவ்ய பாரதி சண்டையின் போது கணவனை பாத்ரூமில் தள்ளி விட்ட பின் கத்தியை எடுத்து மணியின் தொடையில் குத்தியதும், வெகு நேரம் இரத்தம் வெளியேறியதால் மணி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.</p>
<p>இதனையடுத்து சாத்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜ் தலைமயிலான போலீசார் திவ்ய பாரதியை கைது செய்து மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
Source: Read Full Article