
<h2 dir="ltr"><strong>திருமணம் மீறிய உறவு</strong></h2>
<p dir="ltr">திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.</p>
<p>கூலித் தொழில் செய்து வந்த பாபு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த அவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.</p>
<h2><strong>பதட்டமடைந்த குழந்தைகள்</strong></h2>
<p>இதனால் விரக்தியடைந்த ஸ்ரீ தேவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவரது குழந்தைகளை அழைத்து கொண்டு கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கணவர் வீட்டிற்கு வந்த ஸ்ரீதேவிக்கும் , பாபுவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p>
<p>இதையடுத்து ஸ்ரீதேவி வீட்டில் காலை நீண்ட நேரம் எழாமல் இருந்துள்ளார். இதனால் பயந்த குழந்தைகள் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.</p>
<p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்‌ஷய் அனில் வாக்ரே தலைமையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வீட்டில் ஆய்வு செய்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். பின்னர் ஸ்ரீதேவியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
<p>முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீதேவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அவருக்கு உணவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது தலையணையால் மூச்சுத் திணறடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p>
<p>இதற்கிடையில் சம்பவத்துக்கு பிறகு கணவர் பாபு நேரடியாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பிறகே ஸ்ரீதேவியின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்</p>
Source: Read Full Article