
<p style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக குறைதீர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) இன்று (08.07.2026) நடைபெற்றது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் ம.தனபால் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.வீரப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">விவசாய மேம்பாடு மற்றும் மண் பரிசோதனை விழிப்புணர்வு</h3>
<p style="text-align: justify;">இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு மக்காச்சோளம் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான சிறப்பு திட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக தலைமை இடத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களினால் விவசாயிகள் முழுமையாக பயனடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பயிர்கள் விளையும் என்பதை விவசாயிகளுக்கு முழுமையாக எடுத்துரைத்து பயிர்காப்பீட்டினை மேற்கொள்ளவும், கிராமப்புறங்களுக்கே நேரடியாகச் சென்று ஆய்வக மண் பரிசோதனைகளைச் செய்வதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">தோட்டக்கலை திட்டங்கள் மற்றும் சூரியசக்தி மின் மோட்டார்கள்</h3>
<p style="text-align: justify;">தோட்டக்கலைத்துறையின் திட்டங்கள் மற்றும் அதிலுள்ள மானியங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்பதால், மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் இது குறித்த தகவல்களை விவசாயிகளிடம் எடுத்துரைக்க இக்குழு ஆலோசனை வழங்கியது. தொடர்ந்து, சூரிய சக்தியால் இயங்க கூடிய மின் மோட்டார்கள் எத்தனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இத்திட்டம் மூலம் மின்சார சேமிப்புடன், விவசாயிகள் தங்கு தடையின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இது குறித்த விழிப்புணர்வையும் மானிய விபரங்களையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">வங்கி விவசாய கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு</h3>
<p style="text-align: justify;">மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த பின்பும், வங்கிகளின் மூலமாக விவசாயிகளுக்கு மிக குறைந்த அளவிலேயே கடன் வழங்கப்பட்டுள்ளது குறித்து கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மூலம் பெறப்பட்ட விவசாய கடன் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட வங்கிகள் ஏன் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வினவிய அதிகாரிகள், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், மத்திய அரசின் மூலமாக கால்நடைகளுக்கு கருவுறுதலுக்கான ஊசிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இது குறித்த தகவல்களை தலைமையிடத்திற்கு தெரிவித்து எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அதோடு, கால்நடைகளால் சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.</p>
<h3 style="text-align: justify;">சுகாதாரம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை ஆய்வுகள்</h3>
<p style="text-align: justify;">சுகாதார துறையில் மத்திய அரசின் 'சுரக்க்ஷா யோஜனா' திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக எண்ணிக்கையில் மானிய தொகையினை வழங்கிட வேண்டுமென்றும், நிலுவையில் உள்ள உதவி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமூக நலத்துறையில் பெறப்பட்ட மனுக்களில் அதிகப்படியாக குடும்பப் பிரச்சினைகள் சார்ந்து உள்ளதால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது. சத்துணவு துறையில் உள்ள 1055 காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட போது, தற்போதைய நிலைப்பாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு வழங்க அருகாமையில் உள்ள பணியாளர்கள் மூலம் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தார்.</p>
Source: Read Full Article